மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன், மீனா தம்பதியினர். இவர்களின் மகள் அர்ச்சனாவிற்கும், மும்பையை சேர்ந்த ராஜேஸ்வருக்கும் கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி சோழவந்தான் அருகேயுள்ள குருவித்துறையில் நிச்சயதார்த்தம் நடந்தது.
பின்னர் மே 27-ஆம் தேதி குருவித்துறையில் திருமணம் நடத்துவது என முடிவு செய்தனர். நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் அர்ச்சனா மும்பையில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்தார். தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதாலும், அர்ச்சனாவும் மாப்பிள்ளையும் மும்பையில் இருப்பதாலும் மும்பையில் உள்ள மணமகன் வீட்டிலேயே திருமணம் நடத்துவது என இரு வீட்டாரும் முடிவு செய்தனர்.
இதனை தொடர்ந்து கண்ணனும், உறவினர்களும் மும்பை செல்வதற்கு ஏற்பாடு செய்த நிலையில் ஊரடங்கு உத்தரவால் மும்பை செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் திருமணம் தடைபடாமல் திட்டமிட்ட படி இன்று மும்பை அண்டாப்ஹில் பகுதியில் உள்ள சித்தலா தேவி கோவிலில் திருமணம் நடைபெற்றது.
சொந்த மகள் திருமணத்திற்கு செல்ல முடியாமல் கண்ணன் குடும்பதோடு பரிதவித்தார். இருந்தபோதிலும் வாட்ஸ்அப் வீடியோ காலில் மகளின் திருமணத்தை பார்த்து கண்ணனும், குடும்பத்தினரும் ஆனந்த கண்ணீர் விட்டு அழுதனர். பின் மணமக்கள் ராஜேஸ்வர், அர்ச்சனா ஆகிய இருவரும் இங்குள்ள கண்ணன் குடும்பத்தினரிடம் ஆசீர்வாதம் பெற்று தங்கள் பாசத்தை பகிர்ந்து கொண்டனர்.
இருவரின் குடும்பத்தினரின் கடைசி பிள்ளைகளுக்கு திருமணமான நிலையில் பெண்ணின் பெற்றோர் நேரில் செல்ல இயலாத நிலை ஏற்பட்டது சோகத்தை ஏற்படுத்தியது.பெற்றோர்கள் முன்னிலையில் திருமணத்தை நேரில் நடத்த முடியாதது மன வேதனையாக இருப்பதாகவும், ரயில், விமான நிலையம் பதிவுசெய்தும் டிக்கெட் கிடைக்கவில்லை என கண்ணீர் மல்க மணப்பெண் தெரிவித்தார்.