சென்னை: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணு ப்ரியா மரணம் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால் சபையில் இருந்து வெளியேறுவதாக திமுக., காங்கிரஸ், கம்யூ., பாமக ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்தன. தமிழக சட்டசபை இன்று காலை 10 மணிக்குக் கூடியதும் சபாநாயகர் தனபால் கேள்வி நேரத்தை தொடங்கினார். அப்போது எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் எழுந்து டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா மரணம் குறித்து விவாதிக்க கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்றனர். தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, புதிய தமிழகம் கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரிடம் இந்த கோரிக்கையை வற்புறுத்தினார்கள். ஆனால் கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க சபாநாயகர் மறுத்து விட்டார். அவர் கூறும்போது, கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க எந்த முகாந்தரமும் இல்லை. எந்த விதிப்படி கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க சொல்கிறீர்கள் என்று எதிர்கட்சி உறுப்பினர்களை பார்த்து கேட்டார். ஆனாலும் எதிர்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி வாக்குவாதம் செய்தனர். ‘‘ஒரு மனதாக அனைத்து உறுப்பினர்களும் முடிவு எடுத்தால்தான் கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து மற்ற அலுவல்களை எடுக்க முடியும். ஆனால் நீங்கள் மட்டும் வற்புறுத்துவதால் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலை மாற்ற இயலாது. இந்த அவையை நடத்த கூடாது என திட்டமிட்டு குந்தகம் விளைவிக்கிறீர்கள். இதனை அனுமதிக்க முடியாது. எனவே கேள்வி நேரத்தை நடத்த ஒத்துழைப்பு தாருங்கள்’’ என்று சபாநாயகர் கூறினார். இதன் பிறகு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் இருக்கையில் அமர்ந்தனர். பின்னர் கேள்வி நேரம் தொடங்கியது. கேள்வி நேரம் முடிந்ததும் மீண்டும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்து டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா மரணம் குறித்து விவாதிக்க வற்புறுத்தினர். ஆனால் காலையில்தான் தீர்மானம் தந்து இருப்பதாகவும் இந்த பிரச்னையை இப்போதே எடுக்க வேண்டும் என்று யாரும் தன்னை வற்புறுத்த முடியாது என்று சபாநாயகர் மறுத்தார். அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் எழுந்து, ‘‘அரசிடம் இருந்து பதில் வந்தால் தான் சபாநாயகர் எந்த பிரச்சனையையும் எடுக்க முடியும். எனவே சபாநாயகருக்கு யாரும் கட்டளையிட முடியாது’’ என்றார். ஆனாலும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து பேச முற்பட்டனர். சபாநாயகர் அனுமதி தராததால் தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, புதிய தமிழகம், பா.ம.க. உறுப்பினர்கள் அனைவரும் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்; நகரில் போக்குவரத்து மாற்றம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending