ஈரோடு:
இலங்கை முன்னாள் அதிபர் ராஜபட்சவுக்கு தூக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று மதுரை ஆதீனம் செய்தியாளர்களிடம் பேசினார்.
ஈரோட்டுக்கு வந்திருந்த மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், செய்தியாளர்களிடம் பேசியபோது,
இலங்கைத் தமிழர்களைக் கொன்று குவித்து மனித உரிமை மீறலில் ஈடுபட்ட ராஜபட்ச மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அவருக்கு தூக்கு தண்டனை பெற்று தர ஐ.நா. சபை முன்வர வேண்டும் என்றார்.
மேலும், தமிழகத்தில் அதிமுகவை தவிர்த்து மற்ற கட்சிகளிடம் ஒற்றுமை இல்லாமல் பிரிந்துள்ளன. வலுவான எதிர்க் கட்சி இல்லாத காரணத்தால், 2016-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுகவே வெற்றி பெற்று மீண்டும் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறினார்.
சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா 110 விதிகளின் கீழ் அறிவிக்க கூடிய எந்த திட்டப்பணிகளும் மக்களை சென்றடையவில்லை என்று கூறுவது தவறான குற்றச்சாட்டு. தொடர்புடைய துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி திட்டங்களை எப்படி நடைமுறைப் படுத்துவது என்பது குறித்து தினந்தோறும் கோட்டையில் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார் என்று குறிப்பிட்ட மதுரை ஆதினம், திருச்செங்கோடு டிஎஸ்பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க தமிழக அரசு தயாராகவே இருக்கும். ஏனெனில் இந்த வழக்கில் விஷ்ணுபிரியாவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதையே அரசு விரும்புகிறது என்று கூறினார்.


