ஓசூர்:
ஓசூர் வழியாக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்ட ரூ. 31 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை மர்ம கும்பல் வழிப்பறி செய்து தப்பிச் சென்றது.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா, வட்டக்காடு தம்பிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன்(38). சிங்கப்பூரில் வேலை செய்து வரும் இவர், கடந்த மாதம், 9ம் தேதி, தன் நண்பர் சியோஜியுடன் வாடகை காரில், சென்னையில் இருந்து பெங்களூரு விமான நிலையத்திற்கு சென்றார். அங்கு நித்யா என்ற பெண்ணிடம் இருந்து, 2.5 கிலோ தங்கத்தை வாங்கிக் கொண்டு மீண்டும் சென்னை நோக்கி புறப்பட்டார்.
கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள, ஓசூர் அடுத்த மூக்கண்டப்பள்ளி அருகே வரும் போது, பின்னால் காரில் வந்த, எட்டு பேர் கொண்ட மர்ம கும்பல், மாரியப்பன் சென்ற காரை வழிமறித்தது. காரில் இருந்து இறங்கிய மாரியப்பன் மற்றும் சியோஜியை கத்தியை காட்டி மிரட்டி, பாஸ்போர்ட், மொபைல்போன் மற்றும் காரில் இருந்த, 31 லட்சம் மதிப்புள்ள, 2.5 கிலோ தங்கத்தை மர்ம கும்பல், வழிப்பறி செய்து தப்பிச் சென்றது.
பாஸ்போர்ட் மற்றும் மொபைல்போன் மட்டுமே முதலில் திருட்டு போனதாக, கடந்த மாதம், 10ம் தேதி சிப்காட் போலீசில் புகார் செய்த மாரியப்பன், நேற்று முன்தினம் மீண்டும், ஒரு புகார் மனுவை கொடுத்தார்.
இதில், கடந்த மாதம் நடந்த வழிப்பறியில் தன், 2.5 கிலோ தங்கம் வழிப்பறி செய்யப்பட்டதாககுறிப்பிட்டிருந்தார். இதனால், வழிப்பறி செய்யப்பட்ட, தங்கம் கடத்தல் தங்கமாக இருக்கலாம் என, போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் நித்யா என்பவர், பல்வேறு சோதனைகளை தாண்டி, தங்கம் கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. பெங்களூரு விமான நிலையத்திலும், தற்போது சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே வழிப்பறி சம்பவத்தில் தொடர்புடைய சிலரை, கிருஷ்ணகிரி மாவட்ட போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக, போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.


