மதுரை :
திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., சீனிவேல் மாரடைப்பால் இன்று அதிகாலை 6.20க்கு காலமானார்.
கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று காலை மரணமடைந்தார்.
65 வயதாகும் எஸ்.எம். சீனிவேல், கடந்த 25 ஆண்டுகளாக அதிமுக ஒன்றியச் செயலாளராக இருந்து வந்தார். 2001 ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக., சார்பில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். எம்.ஜி.ஆர்.,மன்ற மாவட்டச் செயலாளராக இவர் இருந்து வந்த இவருக்கு, 2016 தேர்தலில் கட்சித் தலைமை போட்டியிட வாய்ப்பளித்தது. மதுரை மேயர் உள்ளிட்ட பலருக்கும் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
ஆனால், மே 17ம் தேதி சீனிவேலுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மாரடைப்பு, சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகளால் மதுரை சொக்கிகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக, மதுரையில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு சீனிவேல் மாற்றப்பட்டார். இங்கு கோமா நிலையில் இருந்து வந்த சீனிவேலுக்கு, இன்று காலை 5.30 மணிக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இவரை பரிசோதித்த டாக்டர்கள், 6.20 மணிக்கு அவர் உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர்.
இவர், நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் மணிமாறனை விட 22,992 ஓட்டுக்கள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். தான் வெற்றி பெற்ற தகவல் கடைசி வரை தனக்குத் தெரியாமலும், வெற்றி பெற்றும் பதவி ஏற்காமலும் உயிரிழந்துவிட்டது பரிதாபம்.



