நல்ல மலைக் காடு 2.5 லட்சம் ஹெக்டேர் விரிந்து பரந்திருக்கிறது. இதில் 1.75 லட்சம் ஹெக்டேர் பரப்பளவை புலிகள் நடமாடும் வனப் பகுதிக்காகவே ஒதுக்கியுள்ளார்கள். இதனையே ‘அம்ராபாத் அபயாரண்யம் ராஜீவ் காந்தி புலிகள் சரணாலயம்’ என்று அழைக்கிறார்கள்.
இரு தெலுங்கு மாநிலங்களிலும் விரிந்து பரந்து உள்ள நல்ல மலைக்காடுகள் சுற்றுலா பயணிகளின் விருப்பத்துக்கு உதந்ததாக விளங்கி வருகிறது. பெருமளவில் பார்வையாளர்களின் வருகையை ஈர்த்து வருகிறது இதன் இயற்கை அழகு.
ஜூலை 1 முதல் மூன்று மாதங்களுக்கு காட்டுக்குள் சுற்றுலா செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனால் நல்ல மலையின் இயற்கை அழமைக் கண்ணாரக் கண்டு மகிழ தற்காலிகமாக வாய்ப்பு இல்லாமல் போனது பற்றி இயற்கை ஆர்வலர்கள் தங்கள் வருத்தத்தை வெளியிட்டுள்ளனர். இதற்காக அவர்கள் மூன்று மாதம் வரை காத்திருக்கத்தான் வேண்டும். வேறு வழி இல்லை.
விலங்குகள் குட்டி போடுவதற்கு இதுதான் அனுகூலமான காலம் என்பதால் அவற்றுக்கு தொந்தரவு ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தோடு வனவிலங்கு இலாகா இந்த முடிவை எடுத்துள்ளது.
நாகர்கர்நூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் செல்லும் வழியில் உள்ள நல்ல மலைக் காடுகளில் பல இடங்கள் பார்வையாளர்களின் மனதை கவர்ந்து வருகின்றன. எனவே நாட்டின் பல இடங்களில் இருந்தும் சுற்றிப் பார்க்க இயற்கை ஆர்வலர்கள் வருவது வழக்கம். சனி ஞாயிறு நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும்.
இயல்பான இயற்கை அழகையும், காட்டில் சுதந்திரமாகத் திரியும் விலங்குகளையும் பார்ப்பதில் மக்கள் ஆர்வம் காட்டி வருவதில் வியப்பில்லை. மழைக் காலத் தொடக்கமே விலங்குகள் குட்டி போடும் காலம். எனவே அச் சமயத்தில் மனிதர்கள் தென்பட்டால் விலங்குகள் தாக்கக்கூடும். புலி கரடி, காட்டுப்பன்றி, காட்டு நாய்கள் போன்ற பிராணிகளுக்கு பார்வையாளர்களால் ஆபத்து நேரும் அபாயம் உள்ளதால் இந்த இடைக்கால தடையை வன இலாகா அதிகாரிகள் விதித்துள்ளார்கள்.
இதுபோன்ற தற்காலிகத் தடை 2017 முதல் அமலில் இருக்கிறது. நல்ல மலையில் விலங்குகளின் பாதுகாப்புக்காக வன இலாகா அதிகாரிகள் பிரத்தியேகமான திட்டங்களை வகுத்துள்ளார்கள். சிசிடிவி கேமராக்கள் ரோந்து பணிகள் இரவு நேர காவலர்களை ஏற்பாடு செய்துள்ளார்கள். விலங்குகளின் இனப் பெருக்கத்திற்கு பாதுகாப்புத் திட்டங்களை வகுத்துள்ளனர்.
நாகர்கர்நூல் மாவட்டம் அம்ராபாதிலுள்ள மன்னனூரில் இருந்து 26 கிலோ மீட்டர் தொலைவில் நல்ல மலை உள்ளது. அழகான பசுமை வனங்கள், பள்ளத்தாக்குகள், உயரமான மலைச் சிகரங்களை இங்குள்ள ‘பர்ஹாபாத் வ்யூ பாயிண்ட்’ பகுதியிலிருந்து அருகில் பார்க்க முடியும்.
வன இலாகா ஏற்பாடு செய்துள்ள சிறப்பு வாகனத்தில் ஏறி வன விலங்குகளையும் அருகில் பார்க்கும் வாய்ப்பு உள்ளது. மன்னனூருக்கு 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அக்கமகாதேவி குகைகளுக்கு கூட பக்தர்கள் அதிக அளவில் சென்று வருவது வழக்கம்.