சென்னை: அதிமுக., மொத்த உறுப்பினர்கள் 1 கோடியே 10 லட்சத்து 41 ஆயிரத்து 600 உறுப்பினர்கள் என்றும், விரைவில் இரண்டு கோடியைத் தாண்டும் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்தார்.
மறைந்த தமிழக முதல்வரும் அதிமுக., பொதுச் செயலாளருமான ஜெ.ஜெயலலிதா இருந்தபோது, அ.தி.மு.க. உறுப்பினர்கள் எண்ணிக்கை 1.5 கோடியாக உயர்ந்தது. தமிழ்நாட்டில் எந்த ஒரு கட்சிக்கும் இல்லாத வகையில் 1.5 கோடி உறுப்பினர்களுடன் அ.தி.மு.க. தனிப்பெரும் கட்சியாக தனித்துவத்துடன் செயல்பட்டு வந்தது.
அவரின் மறைவிற்கு பின்பு அதிமுக கழக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக கே.எடப்பாடி பழனிசாமி பதவி வகித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு இருவரும் இணைந்து, அ.தி.மு.க உறுப்பினர் சேர்க்கையை தொடங்கினார்கள். அ.தி.மு.க. உறுப்பினர்கள் தங்களது அட்டைகளை புதுப்பித்துக் கொள்ள விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நடைபெற்ற பணிகளின் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக., தலைமையகத்தில் புதிய உறுப்பினர்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை, ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் , கழக அவை தலைவர் மதுசூதனன் ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்டது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசியபோது, மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா இருந்தபோது ஒன்றரை கோடிக்கும் அதிகமான தொண்டர்கள் கட்சியில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டார்கள். தற்போது அதிமுக மொத்த உறுப்பினர்கள் 1கோடியே 10 லட்சத்து 41 ஆயிரத்து 600 உறுப்பினர்கள் உள்ளனர் விரைவில் இரண்டு கோடியை தாண்டும்!
தேவைப்படும் பட்சத்தில் முறைப்படி கழக அமைப்பு தேர்தல் நடைபெறும், அதிமுக இயக்கம் எங்களிடம் தான் உள்ளது தொண்டர்கள் எங்களிடம் தான் உள்ளனர் அதனால் இயக்கம் வலுவாக உள்ளது.
ஏற்கெனவே சசிகலா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார்! அதுமட்டுமில்லாமல் சசிகலா புதிய உறுப்பினர் சேர்க்கையில் இல்லை! ஆகவே அடிப்படை உறுப்பினராக கூட சசிகலா இல்லை!
தினகரன் அணிக்குச் சென்ற சட்டமன்ற உறுப்பினர்களிடம் அதுகுறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதிமுக., அவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்க்கும்… என்று பேசினார்.



