விராட் கோலியின் தனிப்பட்ட வாழ்க்கையை கிரிக்கெட் ரசிகர்கள் கிளறக்கூடாது, மதிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. அரை இறுதியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார். இதனால் கடுப்பான கிரிக்கெட் ரசிகர்கள், விராட் கோலியையும், அவரது காதலி அனுஷ்கா சர்மாவையும் கலாய்த்து தீர்த்தனர். டிவிட்டர், பேஸ்புக் என சமூக்க வலைதளங்களில் அவர்களைப் பற்றிய கிண்டலும் கேலியும் ஏகமாகப் பரவியது. இது குறித்த செய்திகளும் ஊடகங்களில் அதிகம் வெளியாயின. கோலி அனுஷ்கா சர்மாவின் உருவப்படம் சில இடங்களில் எரிக்கப்பட்டன. இத்தகைய சம்பவங்களுக்குப் பின்னர் தனது கருத்தை தெரிவித்த யுவராஜ் சிங் இது குறித்து தனது டுவிட்டர் பதிவில்… “இந்திய வீரர் விராட் கோலியின் தனிப்பட்ட வாழ்க்கையை ரசிகர்கள் மதிக்க வேண்டும். ஆஸ்திரேலியா தொடரில் 5 சதங்கள் எடுத்த விராட் கோலி அவரது ரசிகர்களால் மதிக்கப்படுவதற்கு தகுதி உடையவரே. இனிவரும் ஆட்டங்களில் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடுவார்” என்று கூறியுள்ளார்.
To all our real Indian fans who support us in our wins and loses ! Let’s respect @imVkohli and @AnushkaSharma personal life — yuvraj singh (@YUVSTRONG12) March 29, 2015


