கொரொனா பாதிப்பில் உள்ள சீனாவில் இருந்து தனது நாட்டு மக்களை மீட்காத பாகிஸ்தானின் செயல், பாகிஸ்தான் மக்களுக்கும் உலகிற்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீனாவுக்கு பாகிஸ்தான் ஏன் அடங்கிப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் இந்தியாவைப் பார்த்து பாகிஸ்தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்தனர். அதற்கு பதில் அளிக்கும் வகையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், பாகிஸ்தான் கேட்டுக் கொண்டால் பாகிஸ்தான் மாணவர்களை வுகான் நகரில் இருந்து மீட்டு வர இந்தியா உதவும் என்று கூறியுள்ளது.
சர்வதேச அரங்கில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக உள்ள ஒரே வல்லரசு நாடாக சீனா உள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரத்தில், ஐநா.,வில் பாகிஸ்தானின் நிலைப்பாட்டை சீனா மட்டுமே ஆதரித்தது. பாகிஸ்தானுக்கு அதிகக் கடன் அளிக்கும் நாடாகவும் சீனா உள்ளது. இதனால் சீனாவிடம் பாகிஸ்தான் அடங்கிப்போயுள்ளது.
பாகிஸ்தான் பெண்களை சீனாவைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய விவகாரத்திலும், லட்சக் கணக்கான உய்குர் இசுலாமியர்களை சீனா சிறைகளில் அடைத்து கொடுமைப்படுத்தும் விவகாரத்திலும் பாகிஸ்தான் மௌனமாகவே இருந்து வருகின்றது.
காஷ்மீரில் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு என்றும், இந்தியாவில் சிஏஏ.,வுக்கு எதிராக இஸ்லாமியர்களைத் தூண்டிவிட்டு, அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்த மத ரீதியான ஒருங்கிணைப்புடன் செயல்படுத்தி வரும் பாகிஸ்தான், அதே நேரம் சீனாவில் இஸ்லாமியர்களின் வணிகத் தலங்களை சீன மயமாக்குவதிலும், மசூதிகளை தரை மட்டமாக்கி, சீன மயமாக்குவதில் ஈடுபட்டுள்ள சீனாவை தட்டிக் கேட்கவோ அதுகுறித்து எதிர்த்துக் கருத்து கூடவோ தெரிவிக்கவில்லை.
இதனை அமெரிக்காவும் சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையில், சீனாவில் சிக்கியுள்ள பாகிஸ்தான் மக்களை மீட்பதிலும் பாகிஸ்தான் அரசு தவறிவிட்டது. சீனாவில் கொரானோ வைரஸ் பாதிப்பு உச்சத்தில் உள்ளதால், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் சீனாவில் உள்ள தங்கள் நாட்டின் மாணவர்களையும் மக்களையும் விமானங்கள் அனுப்பி மீட்டுவரும் நிலையில், பாகிஸ்தான் அரசு இதுவரை யாரையும் மீட்கவில்லை.
மேலும், சீனாவில் கொரானோ வைரஸ் பாதிப்பு உள்ள பகுதிகளில் தங்கி இருக்கும் 800 பாகிஸ்தான் மாணவர்களை திரும்ப அழைக்க மாட்டோம் என்று பாகிஸ்தான் அதிகாரிகள் வெளிப்படையாகவே கூறி விட்டனர். பாகிஸ்தான் பிரதமரின் நேரடி சிறப்பு சுகாதார ஆலோசகர் சபீர் மிஸ்ரா, ’சீனாவுடன் தோளோடு தோள்கொடுத்து எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறோம். கொரோனா வைரசை சீன அரசு வுகான் நகரத்திற்குள்ளேயே கட்டுப்படுத்தியுள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்த சீன அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் போதுமான அளவில் உள்ளன’ – என்று கூறியுள்ளார். பாகிஸ்தானின் இந்த நிலைப்பாடு அந்நாட்டு மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான் அரசு எந்த மீட்பும் மேற்கொள்ளாததற்கு பாகிஸ்தான் மக்களும், உலக மக்களும் சமூக வலைத்தளங்களில் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் கோரினால் சீனாவில் சிக்கியுள்ள பாகிஸ்தான் மாணவர்களை மீட்கத் தயார் என்று இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
ரவீஷ்குமார் நேற்று புதுதில்லியில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் கூறியபோது, கொரோனா வைரஸ் பாதித்த சீனாவிலிருந்து இதுவரை 640 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 10 பேர் இந்தியா வர விரும்பினாலும், அவர்களுக்கு நடந்த சோதனையில் நோய் தாக்கத்திற்கான அறிகுறி இருந்ததை தொடர்ந்து இந்தியாவுக்கு அவர்கள் கொண்டு வரப்படவில்லை…
சீனாவில் தங்கியுள்ள பாகிஸ்தான் மாணவர்கள் தங்களை மீட்குமாறு இந்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளனர். அதேநேரம் மாணவர்களை மீட்கும் படி பாகிஸ்தானிடம் இருந்து எந்தவித கோரிக்கையும் வரவில்லை. மாணவர்களை மீட்க பாகிஸ்தான் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் அது குறித்து ஆலோசிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.