கொரோனாவுக்கு எதிரான போரில் வெள்ளை உடை அணிந்த மருத்துவர்களும் செவிலியர்களும் மக்களின் உயிர்களைக் காக்கப் போராடி வருகின்றனர். வாழ்வோ, சாவோ முடிவு எதுவாயின் அதைக் களமே தீர்மானிக்கட்டும் என்பதே ஒரு போர் வீரனின் விருப்பமாக இருக்கும்.
ஒரு போர் வீரனின் தியாகத்திற்குச் சற்றும் குறைவில்லாதது இந்தச் சமூகத்துக்கு மருத்துவர்களும் செவிலியர்களும் ஆற்றிவரும் பங்கு. உலகத்தையே கொரோனா தன் கோரப்பிடியில் வைத்துள்ளது. சுகாதாரப் பணியாளர்கள் கொரோனாவுக்கு எதிரான போரில் முன்னின்று செயல்பட்டு வருகின்றனர்.
இங்கிலாந்தைச் சேர்ந்த மார்கரெட் டாப்லி என்ற செவிலியர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நான் இன்று செவிலியராக இருப்பதற்குக் காரணமாக என் பாட்டிதான் என மார்கரெட்டின் பேத்தி பெருமித்துடன் கூறியுள்ளார். கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்த மார்கரெட்டுக்கு வயது 84.
மருத்துவப் பேரழிவு என அழைக்கப்படும் கொரோனாவுக்கு அஞ்சி மார்கரெட் வீட்டில் முடங்கியிருக்கவில்லை. நான் ஒரு செவிலியர் அதன்பின்னர்தான் எல்லாம் என மார்கரெட் 84 வயதிலும் மருத்துவப் பணியாற்றி வந்துள்ளார். இரவு பகல் பாராமல் பணியாற்றி வந்துள்ளார். இறுதியில் கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து அவரது பேத்தி ஹன்னா டாப்லி பேசுகையில், ” நான் என் வாழ்க்கையில் சந்தித்த வலிமை மிகுந்த பெண் அவர். துரதிர்ஷ்டவசமாக அவர் கொரோனா தாக்கத்தால் உயிரிழந்துவிட்டார். என்னுடைய பெற்றோரைப் போலத்தான் கருதினேன். அவர் இல்லாமல் என்னால் எதையும் செய்ய முடியாது. அவரை என் பாட்டி எனச் சொல்வதில் எனக்குப் பெருமையாக இருக்கிறது. அவர் கடினமான உழைப்பாளி அதேநேரத்தில் அனைவரின் மீது அக்கறை கொண்ட பெண்மணி.
`தன் வாழ்க்கையை மற்றவர்களுக்காக அர்ப்பணித்துள்ளார். தினமும் மெசேஜ் இல்லையென்றால் போனில் எதாவது பேசுவார். நான் அவரை மிஸ் செய்கிறேன். என்னுடைய மிகப்பெரிய ரசிகை அவர் நான் செய்யும் எல்லாவற்றிலும் எனக்கு ஆதரவாக இருந்தார். இந்தச் சூழலுக்கு நான் எப்படி மாறுவேன் எனத் தெரியவில்லை. எங்கிருந்தாலும் அவர் என்னையும் எங்களது குடும்பத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறார் என நம்புகிறேன். நாங்கள் அவரை மிகவும் நேசித்தோம்” என்றார் உருக்கமாக.
மார்கரெட் மற்றொரு பேரக்குழந்தை டாம் வுட் செவிலியராக இருக்கிறார். அவர் பேசுகையில், ” நான் இன்று ஒரு செவிலியராக இருக்கிறேன் என்றால் அதற்கு அவர்தான் காரணம். தான் ஒரு செவிலியர் என்பதில் பெருமிதத்தோடு இருந்தார். எல்லோரிடமும் மிகவும் அன்பாக நடந்துகொள்வார் எனப் பெருமித்தோடு கூறினார்.