
புது தில்லி:
பிரதமர் மோடி 3 நாள் சுற்றுப் பயணமாக வரும் ஜூலை 4ம் தேதி இஸ்ரேல் செல்ல உள்ளார். அண்மையில் அமெரிக்கா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்ற அவர், பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தார்.
பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம் குறித்து “உலகின் மிகமுக்கியமான பிரதமர் வருகிறார்” என அந்நாட்டின் முன்னணி இதழ் ஒன்று பிரதான பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. மோடியின் வருகை குறித்து ’தி மார்க்கர்’ எனும் இஸ்ரேலின் முன்னணி பத்திரிக்கை ’விழித்திரு இஸ்ரேல், உலகின் மிக முக்கியமான பிரதமர் வருகிறார்’ என்ற தலைப்பில் தலையங்கம் தீட்டியுள்ளது.
அதில், “அமெரிக்க அதிகர் ட்ரம்ப் இஸ்ரேலுக்கு வருவதற்கு முன்னர் மிகப் பெரும் எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால், அவர் பெரிதாக எதுவுமே கூறவில்லை. ஆனால் தற்போது உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாட்டின் பிரதமராகவும், 125 கோடி மக்களின் தலைவராகவும் உள்ள மோடியின் வருகை அதைவிட முக்கியத்துவம் பெற வேண்டும்” என்று அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேலின் பெரும்பாலான பத்திரிகைகள் மோடியின் வருகைக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன. குறிப்பாக, ஜெருசலேம் போஸ்ட் எனும் செய்தி இணையதளம் ’மோடி வருகை’ என்று தனியாக ஒரு பக்கத்தையே திறந்துள்ளது. இந்தச் சுற்றுப் பயணம் மூலம் இஸ்ரேலுக்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் என்கிற பெருமையை பிரதமர் மோடி பெறுகிறார்.



