இலங்கையில் கடந்த மாதம் நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சேயை வீழ்த்தி சிறிசேனா அமோக வெற்றி பெற்றார். தமிழர்கள் பெருவாரியாக அளித்த ஆதரவு அவரது வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இலங்கை அதிபராக பதவி ஏற்ற பின் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணமாக சிறிசேனா நாளை மறுநாள் (15-ந்தேதி) இந்தியா வருகிறார். அதற்கு முன்னதாக தமிழர்களுடன் நல்லுறவை மேம்படுத்தும் முயற்சிகளை அவர் மேற்கொண்டு உள்ளார். விடுதலைப்புலிகளுக்கு எதிராக போர் நடைபெற்ற போது யாழ்ப்பாணம் தீபகற்பத்தில் உள்ள பலாலி, உயர் பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்குள்ள ஆயிரம் ஏக்கர் நிலத்தை இலங்கை ராணுவம் கைப்பற்றியது. அந்த நிலம் இலங்கை விமானப்படையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. அந்த ஆயிரம் ஏக்கர் நிலத்தை விமானப்படையின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து, வீடு கட்டுவதற்காக தமிழர்களுக்கு வழங்க அரசு முடிவு செய்து இருப்பதாக இலங்கை மந்திரியும், மந்திரிசபையின் செய்தித் தொடர்பாளருமான லட்சுமண் கரியெல்லா நேற்று கொழும்பு நகரில் நிருபர்களிடம் தெரிவித்தார். இதில் ராணுவ மந்திரி என்ற முறையில் அதிபர் சிறிசேனா தன் பங்குக்கு 220 ஏக்கர் நிலத்தை விடுவிக்க இருப்பதாகவும் லட்சுமண் கரியெல்லா கூறினார். 1,022 தமிழ் குடும்பங்கள் இந்த இடத்தில் மறுகுடியமர்த்த இலங்கை அரசு தீர்மானித்து உள்ளது. வீடு கட்டிக்கொள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 2¼ கிரவுண்டு நிலமும், பணமும் வழங்கப்படும் என்று மறுகுடியமர்த்தல் துறை மந்திரி டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். இதேபோல் கிழக்கு மாகாணத்திலும் வீடு கட்டிக்கொள்ள தமிழர்களுக்கு நிலம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். தேயிலை தோட்ட பகுதிகளில் வசிக்கும் தமிழர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுப்பது, உயர் கல்வியில் இந்தியா-இலங்கை இடையேயான தொடர்பை மேம்படுத்துவது, தூதரக அதிகாரிகளுக்கான பாஸ்போர்ட் வைத்திருக்கும் அதிகாரிகள் விசா பெறும் முறையை ரத்து செய்வது, முதலீட்டை அதிகரிப்பது, வேளாண்மை துறையில் இரு நாடுகளும் ஒத்துழைத்து செயல்படுவது போன்ற முடிவுகளையும் இலங்கை மந்திரிசபை எடுத்து உள்ளது.

