சென்னை:
தமிழகத்தின் தனுஷ்கோடியில் இருந்து இலங்கையின் தலைமன்னார் வரை ரூ. 33 ஆயிரம் கோடி மதிப்பில் சாலை அமைக்கும் திட்டத்துக்கான பேச்சுவார்த்தை அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்டை நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்தும் நோக்கில், அந்தந்த நாடுகளுடன் தரைவழி போக்குவரத்தை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி வங்கதேசம், பூடான், இந்தியா மற்றும் நேபாளம் இடையே தடையற்ற வாகன போக்குவரத்துக்காக சுமார் ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பில் பி.பி.ஐ.என். மோட்டார் வாகன ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் இலங்கையையும் இணைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
அதன்படி தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடையிலான 22 கி.மீ., தொலைவு கடலில் பாலம் அமைத்தும், நீருக்கடியில் சுரங்கம் அமைத்தும் இணைக்கும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு நிதியுதவி அளிக்க ஆசிய வளர்ச்சி வங்கியும் ஆர்வம் காட்டி வருகிறது.
கடந்த வாரம் இந்தியா வந்த இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுடன், இந்தத் திட்டம் தொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்படி இருநாட்டு செயலாளர்கள் இடையிலான பேச்சுவார்த்தை இலங்கையில் அடுத்த மாதம் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


