மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவராக தீவிர அரசியலில் இறங்கியுள்ளார் நடிகர் கமல். இதனால் இந்தியன் 2 படத்திற்குப் பிறகு இனி சினிமாவில் நடிக்கப் போவதில்லை என ஏற்கனவே அவர் அறிவித்திருந்தார். ஆனால் அப்பட வேலைகளும் பாதியிலேயே நின்று விட்டது.
பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வரும் கமல், அதனையும் தனது அரசியல் களத்திற்கான ஒரு கருவியாகவே பயன்படுத்தி வருகிறார்.நேற்றிரவு கமலும், இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் தங்களது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படமும், பதிவும் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அது என்ன்வெனில் அவர்கள், தலைவன் இருக்கிறான் பட வேலைகள் பற்றி பதிவிட்டிருப்பது தான்.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ‘விஸ்வரூபம் 2’, ‘சபாஷ் நாயுடு’ படங்களைத் தொடர்ந்து ‘தலைவன் இருக்கிறான்’ என்ற தலைப்பில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக கமல் அறிவித்திருந்தார்.. ஆனால், விஸ்வரூபம் 2 படத்திற்கு பிறகு திட்டமிட்டபடி சபாஷ் நாயுடு படத்தை எடுக்க முடியாமல் பல்வேறு பிரச்சனைகளால் அந்த படப்பிடிப்பு பாதியிலே நின்றது.
அதனைத் தொடர்ந்து கட்சி வேலைகள், பிக் பாஸ் நிகழ்ச்சி, இந்தியன் 2 என பிஸியானார் கமல். நடைபெற்ற லோக்சபா தேர்தலிலும் யாருடனும் கூட்டணி வைக்காமல் கமலின் மக்கள் நீதி மய்யன் தனியாக மக்களின் கவனத்தை பெற்றது.
இந்நிலையில் தான் தலைவன் இருக்கிறான் படம் பற்றிய புதிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. கமலுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை ஏ.ஆர்.ரகுமான் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘கமலுடன் பணியாற்றுவது மகிழ்ச்சியாகவும், ஆர்வாகமாகவும் இருப்பதாக’ தெரிவித்துள்ளார்.
இதே போன்ற டிவீட்டை கமலும் வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘உங்கள் பங்களிப்புடன் எனது அணியை வலுப்படுத்தியதற்கு நன்றி. சில திட்டங்களை உருவாக்கும் போது நன்றாகவும், சரியானதாகவும் உணர முடியும். தலைவன் இருக்கிறான் அத்தகைய ஒன்றாகும். இதற்காக உங்கள் உற்சாகத்தின் நிலை மிகவும் அளப்பரியதாகும். அதை என் மற்ற குழுவினருக்கும் பரப்புகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.