சென்னை:
அரசியல்ல ஜெயிக்கணும்னா ஜாதகம் நல்லா இருக்கணும்; கடவுள் முருகனைப் போல் அறிவு ஜொலிக்கப் பேசுவாரு சிம்பு, தமிழ்நாட்டு மக்களை வாழவைக்க வேண்டும் என்பதால் நாளை முக்கிய முடிவை அறிவிக்க உள்ளேன்… இப்படி கலகல பேட்டி கொடுத்துள்ளார் டி.ராஜேந்தர்.
தமிழகத்தின் பிரபல நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தர், முன்னர் திமுக.,வில் இணைந்து செயல்பட்டார். பின்னாளில் லட்சிய தி.மு.க என்ற பெயரில் கட்சி தொடங்கி தானும் அரசியலில் இருப்பதாகக் காட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறார். அண்மையில் கூட, தனது கட்சி அலுவலகத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளைக் கொண்டாட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து கொண்டாடினார். அந்த நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘வரும் 28ஆம் தேதி, என் அரசியல் வாழ்வின் முக்கிய முடிவை அறிவிப்பேன்’ என்று கூறியிருந்தார். இதனால் அடுத்து அவரின் அரசியல் நிலைப்பாடு குறித்த கேள்விகள் எழுந்தன. இதனால் நாளை புதன்கிழமை அவரது அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்நிலையில் இன்று திருச்சிக்கு வந்திருந்த டி.ராஜேந்தர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ’தமிழ்நாட்டு மக்களை வாழ வைக்க வேண்டும் என்ற முடிவில் நாளை முக்கிய முடிவை எடுக்க உள்ளேன். மாற்றத்தைக் கொண்டு வருகிறேனோ இல்லையோ எனது முடிவில் இருக்காது தடுமாற்றம். மூன்று நாளில் கட்சி ஆரம்பிக்கிறவர்கள் முதல்வர் ஆக நினைக்கிறார்கள். என் மகன் சிலம்பரசன், கடவுள் முருகன் மாதிரி அறிவுடன் பேசக் கூடியவர். ஜாதகம் நன்றாக உள்ளவர்கள்தான் தமிழக அரசியலில் ஜெயிப்பார்கள்’ என்று கூறினார்.
சிம்பு குறித்தும் அரசியல் குறித்தும் அவர் பேசியதால் நாளைய அவரது அறிவிப்பு குறித்து சலசலப்பு எழுந்துள்ளது.