
திருப்பதி: ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா திருப்பதியில் சுவாமி தரிசனத்துக்கு வந்தார். அப்போது, தனது மறுமண அழைப்பிதழை வைத்து சிறப்பு பூஜை செய்தார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் அஸ்வின் ராம்குமாரை காதலித்து கடந்த 2010 செப்டம்பரில் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு வேத் என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பரஸ்பரம் ஒப்புக் கொண்டு, விவாகரத்து பெற்றனர். இதையடுத்து தன் மகனுடன், சென்னை போயஸ் தோட்டத்தில் பெற்றோருடன் வசித்து வருகிறார் சௌந்தர்யா. இதனிடையே, சௌந்தர்யாவுக்கும் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் மகனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதை அடுத்து அடுத்த மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளது.
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன் சௌந்தர்யா தன் தாய் லதா ரஜினிகாந்த்துடன் திருப்பதிக்கு வந்தார். குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் என 20 பேருடன் திருப்பதி வந்த அவர்கள் நேற்று காலை திருப்பதிப் பெருமாளை சிறப்பு தரிசனம் செய்தனர். அப்போது சௌந்தர்யாவின் மறுமண அழைப்பிதழை சுவாமி பாதங்களில் வைத்து வணங்கி பூஜை செய்தனர்.

