நம் உள்மனதில் என்ன நினைக்கிறோமோ அதை போல ஆவோம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் பேசினார்.
கரூர் தனியார் திருமண மண்டபத்தில் 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் அச்சமின்றி பொதுத் தேர்வை எதிர்கொள்வதற்கான சிறப்பு வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. எம். ஆர். வி. டிரஸ்ட் மூலம் நடைபெற்ற இந்த சிறப்பு நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
25 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவ மாணவிகளுக்கு மாதிரி வினா தொகுப்பு ஸ்டேஷனரி பொருட்கள் மற்றும் குறிப்பேடு, மரக்கன்றுகளை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது மாணவர்கள் தாங்கள் படிக்கும் கல்வியை தாண்டி வாழ்க்கைக் கல்வியையும் கற்றுக் கொள்ள வேண்டும்… என்றார்.
அவர் மேலும் பேசியபோது… ஒழுக்கத்தையும், சுற்றுச்சூழலையும் பேணிப் பாதுகாக்க வேண்டும் . சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியது மிக முக்கியம் என்பதற்கு எனது வாழ்க்கையில் ஒரு உதாரணம் சொல்கிறேன்…
நான் வெளிநாடு செல்கையில் ரயில் பயணத்தின்போது வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு பழத் தோலை வெளியில் வீசினேன் ஆனால் அருகில் இருந்த ஒரு சிறுமி சாக்லேட் சாப்பிட்டுவிட்டு சாக்லெட் பேப்பரை 200 மீட்டர் தள்ளி இருந்த குப்பைத் தொட்டியில் கொண்டு சென்று போட்டார். அப்பொழுது மிகப்பெரிய ஒரு வாழ்வியல் பாடத்தைக் கற்றுக் கொண்டேன் .. அதிலிருந்து நான் குப்பையை ரோட்டில் வீசி எறிய மாட்டேன்.
நீ என்ன ஆக வேண்டும் என்று நினைக்கிறாயோ அதுவாகவே ஆவாய் என்றார் விவேகானந்தர்! அதைப்போல நான் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினராக ஆவேன் என்று நண்பர்களிடம் கூறினேன்! ஆனால் அவர்கள் என்னிடம் கிண்டல் செய்தார்கள்! ஆனால் நான் தற்போது அமைச்சராக ஆகி உள்ளேன்! நம் உள்மனதில் என்ன நினைக்கிறோமோ அதை போல ஆவோம் என்றார் அவர்.