கொழும்பு: ஆளும் கூட்டணியில் ஏற்பட்ட பிளவை அடுத்து இலங்கை பிரதமராகப் பதவி ஏற்றார் மகிந்த ராஜபட்ச. இலங்கை அரசியலில் ஏற்பட்ட பரபரப்பு திருப்பமாக, பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்டார். புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபட்ச பதவி ஏற்றார்.
இலங்கையில் 2015 இல் நடைபெற்ற தேர்தல் ராஜபட்சவுக்கு எதிராக ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும், மைத்ரீபால சிறீசேனவின் இலங்கை சுதந்திரக் கட்சியும் இணைந்து ஆட்சி அமைத்தன. சிறீசேன அதிபராகவும், ரணில் விக்ரமசிங்க பிரதமராகவும் பதவி ஏற்றனர்.
இந்நிலையில், அண்மைக் காலமாகவே அதிபர், பிரதமர் இருவருக்கும் இடையில் பிணக்குகள் அதிகரித்தன. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்த நிலையில், வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டது இந்தக் கூட்டாட்சியில் அங்கம் வகித்த மகிந்த ராஜபட்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு!
ரணில் தலைமையிலான அரசுக்கு அளித்துவரும் ஆதரவை வாபஸ் பெறுவதாகவும், அரசில் இருந்து வெளியேறுவதாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான மகிந்த அமரவீர வெள்ளிக்கிழமை மாலை அறிவித்தார். இதனால் இலங்கை அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. சபாநாயகர் கரு ஜயசூரியாவிடம் எழுத்து மூலம் வாபஸ் பெறும் கடிதத்தைக் கொடுத்து விட்டதாக அமரவீர தெரிவித்தார்.
இதையடுத்து பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையில் இலங்கை புதிய பிரதமராக மகிந்த ராஜபட்ச பதவி ஏற்றார். அவருக்கு அதிபர் சிறீசேன பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். வரும் நவ.5ஆம் தேதி இலங்கை நாடாளுமன்றம் கூடுகிறது. அதில் ராஜபட்ச பெரும்பான்மையை நிரூபிப்பார் என்று கூறப்படுகிறது.
இருப்பினும், இலங்கை அரசியலில் புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. இலங்கை அரசியல் அமைப்பு சட்டம் 19ஆவது பிரிவின் படி ஆட்சியில் உள்ள பிரதமரை நீக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை என்றும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தால் மட்டுமே பிரதமர் பதவி இழக்க நேரிடும் என்றும் ரணில் விக்ரமசிங்க கட்சியினர் கூறுகின்றனர். வாபஸ் பெற்ற காரணத்தாலேயே பெரும்பான்மை இருக்கிறதா என்பதை அறியாமல், பிரதமரை பதவி நீக்கும் அதிகாரம் அதிபருக்கு இல்லை என்று கூறுவதால், இலங்கையில் அரசியல் சட்ட சிக்கல் எழுந்துள்ளது. மேலும், அதிபர் சிறீசேன முடிவுக்கு இலங்கை அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், இலங்கையில் இன்று திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.