தினசரி ஒரு வேத வாக்கியம்: 10. வயோதிகம் வராமல் மரணிக்கக் கூடாது!

Published:

dhinasari one veda vaakyam

வயோதிகம் வராமல் மரணிக்கக் கூடாது!

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா 
தமிழில்: ராஜி ரகுநாதன் 

“மா புரா ஜரஸோ ம்ருதா:”
— அதர்வண வேதம் 

“(ஓ மானுடா!) நீ வயோதிகம் வராமல் மரணிக்காதே!”

இந்த வாக்கியத்தின் மூலம் மனிதன் பரிபூரண வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற வேதத்தின் வாழ்த்து வெளிப்படுகிறது.
தீர்க்காயுஷ்மான் பவ!’ என்று பெரியோர்கள் ஆசீர்வாதம் செய்வது நம் சம்பிரதாயம்.

நீண்ட ஆயுள் என்பது ஒரு வாய்ப்பு.    உயிரோடிருந்தால் எந்த கணத்திலும் நம்மில் திடீரென்று மாற்றம் நிகழ்ந்து உத்தம நிலைக்கு முயற்சிக்கலாம். அதனால் வாழ்க்கையை விட மதிப்பு வாய்ந்தது வேறு எதுவும் இல்லை. மானுட வாழ்வின் மதிப்பை வேதக் கலாச்சாரம் தெளிவாகவும் முழுமையாகவும் தெரிவிக்கிறது.

புலன்கள் அனைத்தும் புஷ்டியாக பணிபுரிந்து ஜீவிதம் முழுமையும் தார்மீகமான புத்திக்கூர்மையுடனும், தர்ம வழியிலான பொருளீட்டலுடனும் இகம் பரம் இரண்டையும் சாதிக்க வேண்டும் என்று வேதம் போதிக்கிறது.

மனிதனுக்கு பால்யம், கௌமாரம், யௌவனம், வயோதிகம் என்ற நான்கு நிலைகள் உண்டு. இந்த நான்கையும் பரிபூரணமாக அனுபவிக்க வேண்டும். அகால மரணத்தில் வீழக்கூடாது. எப்படிப்பட்ட பலவீனமான கணத்திலும் வாழ்க்கை மீது விரக்தியை வளர்த்துக் கொள்ளக்கூடாது.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

வாழ்வின் மீது ஆசையும் அன்பும் மிகமிகத் தேவை. நல்ல சிந்தனைகளோடு கூடிய ஜீவிதத்தை ஆசைப்பட வேண்டும். இந்த கணத்தில் மிகக் கடினமாகத் தோன்றும் வாழ்க்கை, மறு கணத்தில் மிக சௌக்கியமாகத் தோன்றலாம். எனவே எந்த கணத்திலும் வாழ்க்கை மேல் வெறுப்பு வரக்கூடாது.

மானுட வாழ்க்கை ஒரு வரம். பால்யம், கௌமாரம், யௌவனம், வயோதிகம் – இவற்றில் ஏற்படும் பலவிதமான அனுபவங்களும் ஒவ்வொரு நிலையிலும் சாதிக்க வேண்டிய கடமைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

வாழ்க்கை முழுவதும் கடமையாற்றுவதிலிருந்து பின்வாங்கக் கூடாது. எந்த கணத்தில் வாழ்க்கை நின்று போனாலும் அதன் பின் செய்ய வேண்டிய கடமைகளும் நிறுத்திவிட்டாற் போலத்தான். எனவே பரிபூரணமான வாழ்க்கைக்காக ஆசைப்பட வேண்டும்.

முதுமை வேறு. ‘ஜரா’ எனப்படும் வயோதிகம் வேறு. ஜரா என்றால் க்ஷீணித்துப் போவது. முதுமை என்றால் பெரியவராவது. முதுமை இயல்பாக வரக்கூடியது. ஆனால் ஜரா மட்டும் நம் நடத்தையின் தவறுகளால் ஏற்படுகிறது. சரியான உணவு,  ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள், யோகாப்பியாசம், உடற்பயிற்சி, நற்சிந்தனைகள் போன்றவை இல்லாவிட்டால் முதுமையில் உடல் க்ஷீணித்துப் போகிறது.

ALSO READ:  இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

நாம் முதுமையில் ஜராவின் கையில் சிக்காமல் கவனம் வகிக்க வேண்டும்.

மீதியுள்ள மூன்று நிலைகளிலும் வெறும் போகங்களின் அனுபவம் மட்டுமே முக்கியம் என்று எண்ணாமல் நியமத்தோடு வாழ்ந்தால் முதுமை, ஜராவின் கைவசம் ஆகாது. க்ஷீணித்து நோய்வாய்ப்பட்ட சரீரம் ‘ஜரா’ நிலையில் ஏற்படுகிறது.

ஆயின், “ஜாதஸ்யஹித்ருவோம்ருத்ய” – மரணம் தவிர்க்க முடியாதது.

அதற்கு முன்பு உள்ள நிலை ஜரா.  அது இயல்பாகவே வருகிறது. இத்தனை வருடங்கள் உழைத்து சாதனை செய்த உடல் இயற்கையாகவே இறுதி கட்டத்தில் ஜராவுக்கு ஆளாகிறது.  அந்த ‘ஜரா’ வந்த பின்தான் மரணம் ஏற்பட வேண்டும். அதுவரை மரணத்தை அண்ட விடக்கூடாது.

இலை உதிரும் முன் பழுத்துப் போகும். வயோதிகத்தில் அந்திம வேளையில் ஜரா வந்து சேருகிறது. அதுவரைக்கும் நல்லபடி வாழ வேண்டும். அதற்குள்ளாக மரணத்தை நெருங்க விடக் கூடாது.

இதுவே நம்முடைய தீர்க்காயுளை விரும்பும் வேதத்தின் ஆசீர்வாதம்.

நீண்ட ஆயுளுக்கு தர்மத்தோடு கூடிய  வாழ்க்கை பிரதானமானது. தர்ம மயமான ஸ்ரீராமனின் பரிபாலனையில் பெரியவர்கள், தம் பிள்ளைகளுக்கு இறுதிச் சடங்கு செய்ய வேண்டிய நிலைமை ஏற்படவில்லை என்று வால்மீகி வர்ணிக்கிறார். 

“ந சஸ்ம வ்ருத்தா பாலானாம் ப்ரேத கார்யாணி குர்வதே”
— ராமாயணம்.  

ALSO READ:  வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

அகால மரணங்கள் நிகழக் கூடாது என்ற கோரிக்கை இருந்தால் துர்மரணங்களுக்குக் காரணமான அதர்மங்கள் செய்யக்கூடாது என்ற பொறுப்பும் எச்சரிக்கையும் கூட முக்கியம்.

“வ்ருத்தேஷு சத்சுபாலானாம் நாசீன்ம்ருத்ய பயம் ததா!!”

தர்ம மயமான ராம ராஜ்யத்தில் முதியோர்கள் உயிர் வாழ்ந்திருக்கையில் பாலர்கள் மரணிக்கவில்லை என்பது ராமாயணத்தின் வர்ணனை.

திடீர் மரணங்கள், விபத்துகள் போன்றவற்றினால் கூட மரணம் நிகழக் கூடாது. அனைவரும் சுகமாக பூரண வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்றால் அதற்கு தேவையான தார்மீக வாழ்க்கை முறை அஸ்திவாரமாக அமைய வேண்டும் என்பதை மறக்கக்கூடாது.

சம்பூர்ணமான வாழ்க்கையை வேதம் விரும்புகிறது என்றால் வேதம் கூறும் தர்மம் அனைத்தும் அத்தகைய லட்சிய சாதனைக்காகவே என்பதை உணர வேண்டும்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img