முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உடனடியாக சரண் அடைவது நல்லது. காங்கிரஸ் ப.சிதம்பரத்துக்கு உடனடியாக சரண் அடையுமாறு ஒரு கட்டளையைப் பிறப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால், உடனே ப.சிதம்பரத்தை தங்கள் கட்சியில் இருந்து வெளியேற்றி அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளார் பாஜக., மூத்த தலைவரும் எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் இன்று காலை தள்ளுபடி செய்த நிலையில், மாலை அவரது வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் சென்று சம்மன் வழங்கினர்.
முன்னதாக, இன்று நடந்த விசாரணையில் உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். உச்ச நீதிமன்றமும், அவரது வழக்கை அவசர வழக்காக ஏற்று விசாரிக்க மறுத்துவிட்டது. நாளை புதன்கிழமை விசாரிக்கப் படும் என்று கூறியது.
இந்நிலையில் சிதம்பரத்தின் தில்லி வீட்டுக்குச் சென்று அவர் உடனடியாக ஆஜராகுமாறு சம்மன் கொடுத்துள்ளனர் சிபிஐ அதிகாரிகள். ஆனால் சிதம்பரம் வீட்டில் இல்லை என்று கூறப் பட்டது. இதை அடுத்து, அவர் காணாமல் போனதாகக் கூறப் படுகிறது.
இந்நிலையில், பாஜக., மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி, ப.சிதம்பரத்தை உடனடியாக சரண் அடையுமாறு கூறியுள்ளார்.