
சபரிமலை செல்லும் பக்தர்கள் நிலக்கல் முதல் பம்பை வரை இலகு ரக வாகனங்களில் பயணிக்க கேரள உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த உத்தரவின் மூலம் 12 பேர் வரை அமர்ந்து செல்லக்கூடிய இலகுரக வாகனங்கள் பம்பைக்கு செல்லலாம்; சாலையோரங்களில் வாகனங்களை இடையூறாக நிறுத்தக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கேரளாவில் பெய்த பெருமழை காரணமாக பம்பை செல்லக்கூடிய சாலைகள் பெரும் சேதம் அடைந்தன. இதனால் கடந்த ஆண்டு சபரிமலை பக்தர்கள் செல்லும் வாகனங்கள் பம்பை வரை செல்ல அனுமதி மறுக்கப்பட்டது! தனியார் வாகனங்கள் நிறுத்தப்பட்டு பக்தர்கள் கேரள அரசு பஸ்சில் சென்று வந்தனர்! இதனால் பக்தர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.

இந்த விவகாரத்தில் கேரள உயர் நீதிமன்றம் நேற்று ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில் பக்தர்கள் வரும் வாகனங்களில் 12 இருக்கைகள் வரை உள்ள தனியார் வாகனங்கள் பம்பை வரை செல்லலாம். பக்தர்களை இறக்கிய பின்னர் நிலக்கல்லில் நிறுத்தப்படவேண்டும்! தரிசனம் முடிந்த பின்னர் பம்பை வந்து பக்தர்களை அழைத்துச் செல்லலாம்!
பம்பை முதல் நிலக்கல் வரை சாலை ஓரங்களில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்படுகிறது என்று கூறப்பட்டது

கடந்த வருடம் நிலக்கல்லைத் தாண்டி வாகனங்கள் அனுமதிக்கப்படாத நிலையில் மத்திய இணை அமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் சிலர் அந்த வழியே வந்த போது காவல்துறை அதிகாரி வாகனத்தை நிறுத்தி தடை விதித்தார். இதனால் எழுந்த வாக்குவாதத்தால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. பின்னர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது ஆதரவாளர்களுடன் கேரள அரசு பேருந்திலேயே நின்றபடி பயணம் செய்தார்!

