மும்பை:
ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவைகள் கடந்த ஆண்டு அறிமுகமாகி இந்தியாவில் முன்னணி இடத்தை பிடித்துள்ள நிலையில் ஜியோவின் அடுத்த கட்ட அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
ஜியோ ஃபைபர் ஹோம் பிராட்பேண்ட் சேவை கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் அதன் சேவைகள் சார்ந்த அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில், ஜியோ ஃபைபர் ஹோம் பிராட்பேண்ட் சேவையின் சோதனைகள் முதற்கட்டமாக வழங்கப்படவுள்ள நகரங்கள் ஜியோ வாடிக்கையாளர் சேவை மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ட்விட்டரில் ஒரு கேள்விக்கு அளிக்கப்பட்ட பதிலில், ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் பிரீவியூ சலுகை முதற்கட்டமாக மும்பை, டெல்லி, ஆமதாபாத், ஜாம்நகர், சூரத் மற்றும் வதோதரா உள்ளிட்ட நகரங்களில் துவங்கும் என தெரிவித்துள்ளது. மற்ற நகரங்களிலும் ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் சேவைகளை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
ஜியோ ஃபைபர் பிரீவியூ பிராட்பேண்ட் சேவைகளை பயன்படுத்திய வாடிக்கையாளர்கள் பிராட்பேண்ட் வேகம் குறித்து பலமுறை ட்வீட் செய்துள்ளனர். அதன்படி 1Gbps இணைப்பில் 70Mbps முதல் 100Gbps வரையிலான வேகம் கிடைத்ததாக தெரிவித்திருந்தனர், எனினும் அதிகபட்சம் பூனேவில் 743.28Mbps வேகம் பதிவு செய்யப்பட்டுள்ளதாம். சேவையை துவங்கிய முதல் 90 நாட்களுக்கு இலவச சேவை வழங்கப்பட்டு அதன் பின் ஒருமுறை கட்டணமாக ரூ.4000 – ரூ.4500 வரை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்த கட்டணம் ஜியோ ஃபைபர் ரவுட்டருக்கானது என்றும் இந்த கட்டணம் திரும்ப வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.