சிவராத்திரியன்று கீசரிகுட்டா ஸ்ரீராமலிங்கேஸ்வர சுவாமியை தரிசித்தார் தமிழிசை சௌந்தர்ராஜன்.
தெலங்காணா மாநில மக்கள் சிவராத்திரியை மிகச்சிறப்பாக, மிகமிக வைபவமாக கொண்டாடுவது வழக்கம் . வீடுகளை முதல் நாளே சுத்தம் செய்வார்கள். உபயோகித்த பாத்திரங்கள், புழங்காமல் உள்ளே இருக்கும் பாத்திரங்கள்… எல்லாவற்றையும் தேய்த்துக் கழுவி அடுக்குவார்கள்.
துணிமணிகள், போர்வைகள் என்று ஒன்றுவிடாமல் துவைத்து உலர்த்தி எடுத்து வைப்பார்கள். ஒட்டடை இன்றி வீட்டை பளிச்சென்று துப்புரவாக்குவார்கள். அதன்பின் சிவராத்திரி அன்று உபவாசமிருந்து உண்பதற்காக பழங்களும், சர்க்கரை வள்ளிக்கிழங்கு களும் வாங்கி வருவார்கள்.
சிவராத்திரி அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து விளக்கேற்றி வீட்டை அலங்கரித்து சிவ பூஜை செய்வார்கள். கோயில்களில் சிறப்பு அபிஷேகங்களில் பங்கு பெறுவார்கள். இரவு முழுவதும் கண்விழித்து சிவ வழிபாட்டில்… பெரும்பாலும் அருகாமையில் உள்ள சிவன் கோயில்களில் பஜனையில் ஈடுபடுவார்கள்.
அப்படிப்பட்ட தெலங்காணாவில் உள்ள கீசரிகுட்டா என்ற மலைக் கோயில் மிகப் பிரபலமான சிவாலயம். கீசரிகுட்டாவில் சிவராத்திரியன்று சுற்றுப்புறம் உள்ள அத்தனை கிராமங்களில் இருந்தும் பக்தர்கள் பெருமளவில் தரிசனத்திற்கு வருவார்கள். இதனை ஒரு புனித யாத்திரையாகவே கருதுவார்கள். அந்தக் கூட்டத்திலும் சிவநாமத்தில் தம்மை மறப்பார்கள்.
ஆளுநர் தமிழிசை கீசரிகுட்டாவிற்கு சிவ தரிசனத்திற்கு வந்து சிவராத்திரியன்று இறை வழிபாடு செய்தார் .தம்பதி சமேதராக வந்திருந்தார். அர்ச்சகர்கள் அவர்களுக்கு சிறப்பு கௌரவம் செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெலங்காணா மாநில மக்களின் நலனுக்காக தான் பிரார்தித்ததாகக் கூறினார். கூட்டம் அதிகம் இருந்த போதிலும் பக்தர்களுக்கு வசதிகள் சௌகர்யமாக இருந்தன என்றார்.