கொரோனா பாதித்த நாடுகளுக்கு சென்று வந்ததை மறைப்பது குற்றமாக கருதப்படும் என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து 61 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக கேரளாவில் கடந்த சில நாட்களில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
அதாவது, நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 8 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. அதேபோல், கர்நாடகா, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் தலா 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், பயண விவரங்களை மறைப்பது குற்றமாக கருதப்படும் என கேரள சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து பேசிய கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா, கொரோனா வைரஸ் பாதித்த பகுதிகளுக்கோ அல்லது நாடுகளுக்கோ சென்று திரும்பியவர்கள் அந்தத் தகவலை சுகாதாரத்துறையிடன் முறையாக தெரிவிக்க வேண்டும். அப்படி செய்யவில்லை எனில் அது குற்றம் ஆகும். ஒருவேளை பயணம் மேற்கொண்டதன் மூலம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தால் பிறருக்கும் பரவக்கூடும்.
ஆகையால் சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் அடையாளத்தை சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் வெளிப்படுத்த வேண்டும். இதுபற்றி முதலமைச்சர் பினராயி விஜயனும் தெரிவித்துள்ளார். அதாவது பயண விவரங்களை மறைப்பது குற்றமாகும்.
அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார், என தெரிவித்துள்ளார். கேரளாவில் புதிதாக வைரஸ் தொற்றுக்கு உள்ளான 8 பேரில் 2 பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 3 வயதுக் குழந்தையின் பெற்றோர் ஆவர். இவர்கள் இத்தாலியிலிருந்து வந்ததை அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் மறைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.