லக்னௌ:
15 வருசமா சுதந்திரமாக இருந்துவிட்டீர்கள், இனி சிறைக்குச் செல்லத் தயாராகுங்கள் என்று கூறியுள்ளார் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்.
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்று முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலடி தரும் வகையில் ஞாயிற்றுக் கிழமை நேற்று ஒரு நிகழ்ச்சியில் பேசிய யோகி ஆதித்யநாத், கிரிமினல்களிடம் இரக்கம் காட்டுவது என்ற பேச்சுக்கே இடமில்லை’ என கறாராகத் தெரிவித்தார்.
சட்டத்தை மீறுபவர்கள், அரசியல் ரீதியாக தஞ்சம் அடைந்துகொண்டு மாநிலத்தின் அமைதியைக் குலைப்பவர்களை சட்டத்தின் கையில் ஒப்படைப்பதில் எந்தவிதத்திலும் தயங்கப் போவதில்லை. அரசும் நிர்வாகமும் கண்டிப்புடன் அவர்களைக் கையாளும். கடந்த 15 வருடங்களாக சிலர் சுதந்திரமாக நினைத்தபடி இருந்துவிட்டனர். அவர்கள் ஒரு நாளில் தங்களை மாற்றிக் கொள்ள இயலாது. அவர்கள் இப்போதும் கூட தங்கள் குணத்தை சில பகுதிகளில் வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்கள் நிச்சயம் சிறைக்குச் செல்வார்கள். விவசாயிகளை மற்றவர்கள் சுரண்ட அனுமதிக்க மாட்டேன். விவசாயிகள் நலனை புறக்கணிக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளின் உற்பத்தி பொருட்கள், நல்ல விலைக்கு வாங்கப்பட வேண்டும். என்று பேசினார் யோகி ஆதித்யநாத்.