கர்ப்பிணி மகளைப் பார்க்கும் ஆசையில் காவேரியில் குதித்த தந்தை! சடலமாக மீட்பு!

Published:

kaveri
kaveri

மேட்டூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட மகளைப் பார்க்க காவிரி ஆற்றில் நீந்தி வந்த தந்தை பரிதாபமாக உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் பெருமாள். பழ வியாபாரியான இவர், தனது மகள் சுமதிக்கும், கர்நாடக மாநிலம் கோபிநத்தத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தார்.

கர்ப்பிணியான சுமதி கடந்த 3 நாட்களுக்கு முன்பு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். மகளைப் பார்ப்பதற்காக பெருமாளும், மணிகண்டன் தந்தை வெங்கடாஜலம் ஆகிய இருவரும் இருச்சக்கர வாகனத்தில் மேட்டூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். ஆனால் கர்நாடக எல்லையில் அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், அவர்களை அனுமதிக்க மறுத்து திருப்பி அனுப்பி விட்டனர்.

பின்னர் 2 பேரும் காவிரி ஆற்றில் நீந்தி மேட்டூர் வர முடிவு செய்தனர். நேற்று முன்தினம் அவர்கள் காவிரி ஆற்றில் குதித்து நீந்த தொடங்கினார்கள். ஒருமணி நேரத்திற்கு பிறகு வெங்கடாஜலம் எல்லையை கடந்து பாலாறு அருகே கரையேறி விட்டார். ஆனால் பெருமாள் வந்து சேரவில்லை.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்ததையடுத்து, தீயணைப்புத் துறை வீரர்கள் காவிரி ஆற்றில் குதித்து பெருமாளை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

இந்த நிலையில் நேற்று பெருமாள் பிணமாக மீட்கப்பட்டார். ஈரோடு மாவட்டம் சென்னம்பட்டி வனப்பகுதி அருகே மீட்கப்பட்டதால், அருகில் உள்ள பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மகளை பார்க்க ஆற்றில் குதித்து உயிரை விட்ட தந்தையின் மரணம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Related articles

Recent articles

spot_img