புது தில்லி:
வரும் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் தே.ஜ.கூட்டணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த். அவரது பெயரை பாஜக.,வின் உயர்நிலைக் கூட்டத்தில் அறிவித்தார் பிரதமர் மோடி. பின்னர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார் அமித் ஷா.
வேட்பாளர் அறிவிப்புக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது, குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று அவர்களிடம் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில், பாஜக., தன்னிச்சையாக வேட்பாளரை அறிவித்துள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. குடியரசுத் தலைவர் வேட்பாளர் யார் என்று கூறாமலேயே ஒப்புக்கு பாஜக., தரப்பு எதிர்க்கட்சிகளுடன் பேசியதாக விமர்சித்துள்ளன. எனவே, கருத்து ஒற்றுமை அடிப்படையில் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது.
பாஜக அறிவித்துள்ள குடியரசுத் தலைவர் வேட்பாளர் விவகாரத்தில் கருத்தொற்றுமை ஏற்பட வாய்ப்பில்லை என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், “
குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் குறித்து அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்பியது. ஆனால், பாஜக தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளது. ஆளும் கட்சியாக இருப்பவர்கள் முதலில் பிற கட்சிகளுடன் வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசித்திருக்க வேண்டும். ஆனால், பாஜக தங்கள் கட்சிக் கூட்டத்தை நடத்தி வேட்பாளரை அறிவித்துவிட்டது. அவர்கள் இப்படி செயல்படுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எனவே, வேட்பாளர் குறித்த முடிவில் கருத்தொற்றுமை ஏற்பட வாய்ப்பு இல்லை.
அனைத்து எதிர்க்கட்சிகளும் பங்கேற்கும் கூட்டம் வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இதில் இறுதி முடிவு எடுக்கப்படும்” என்று கூறினார்.
இத்தகைய சூழலில், குடியரசுத் தலைவர் வேட்பாளர் விவகாரத்தில் போட்டி ஏற்படும் என்று தெரிகிறது. போட்டி உறுதி எனத் தீர்மானம் செய்யப்பட்ட நிலையில், எதிர்க்கட்சியினர் தரப்பில் இருந்து யாரைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்பது, வரும் 22ஆம் தேதி வியாழக்கிழமை கூட்டத்துக்குப் பின் தெரியவரும். இருப்பினும், அக்கட்சியின் சார்பில் மக்களவை முன்னாள் சபாநாயகர் மீராகுமாரை காங்கிரஸ் கட்சி களம் இறக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தலித் சமூகத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவர் வேட்பாளராகத் பாஜக., வால் முன்னிறுத்தப் பட்டதன் மூலம், தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை ராம்நாத்துக்கு போட்டியாக களம் இறக்க வேண்டிய சூழல் காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தலித் சமூகத்தை சேர்ந்த மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமார் எதிர்க்கட்சிகள் சார்பில் களம் இறக்கப்படலாம் என்று தெரிகிறது.
ராம்நாத் கோவிந்த்தை பாஜக வேட்பாளராக அறிவித்தது குறித்து கருத்து தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, “தன்னிச்சையாக வேட்பாளரை அறிவித்ததன் மூலம் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக., ஒரு போட்டியை ஏற்படுத்திவிட்டது” என்று கூறினார்.