ஐபிஎஸ் அதிகாரி மார்பில் பாய்ந்த குண்டு! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

Published:

sharma

பெங்களூருவில் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ஆர்.பி.ஷர்மா குண்டு காயத்துடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

கர்நாடக மாநில காவலர் வீட்டுவசதி வாரிய டி.ஜி.பி.யாக பணியாற்றி வருபவர் ஆர்.பி.ஷர்மா. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியான இவர், கடந்த 1977-ம் ஆண்டு ஐ.பி.எஸ். பேட்ஜை சேர்ந்தவர் ஆவார். இவர் தனது குடும்பத்தினருடன் பெங்களூரு கொத்தனூர் பகுதியில் ஒரு வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை ஆர்.பி.ஷர்மா தனது அறையில் இருந்தார். அப்போது அவரது அறையில் இருந்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அந்த அறைக்கு சென்று பார்த்தனர்.

அப்போது கழுத்து, மார்பு பகுதியில் குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் ஆர்.பி.ஷர்மா உயிருக்கு போராடினார்.

இதனால் கடும் அதிர்ச்சிக்குள்ளான குடும்பத்தினர் ஆர்.பி.ஷர்மாவை மீட்டு கொலம்பியா ஆசியா தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி அறிந்ததும் பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல்பந்த் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவம் நடந்த ஆர்.பி.ஷர்மாவின் வீட்டிற்கு சென்று பார்வையிட்டு அவரது குடும்பத்தினரிடம் விசாரித்தனர்.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

கைத்துப்பாக்கியில் இருந்து தவறுதலதாக குண்டு பாய்ந்து ஆர்.பி.ஷர்மா காயமடைந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இது தற்செயலாக வீட்டில் நடந்த விபத்து. அவர் நன்றாக இருக்கிறார், சுயநினைவுடன் இருக்கிறார், உரையாடுகிறார் “என்று பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் கமல் பந்த் தெரிவித்துள்ளார்.

sharma1

இந்நிலையில் குண்டுகள் நிரப்பப்பட்ட துப்பாக்கியை சுத்தம் செய்தபோது தவறுதலாக துப்பாக்கி இயங்கியதில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக ஷர்மா எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

எனினும் இந்த சம்பவத்தில் வழக்குப் பதிவு செய்திருக்கும் காவல்துறையினர், வேறு ஏதேனும் காரணங்கள் இருக்குமோ என்ற கோணத்தில் விசாரித்து வருகிறார்கள்.

கடந்த 2018-இல் சித்தராமையா தலைமையிலான அரசு காவல்துறையின் செயல்பாட்டில் தலையிடுவதாக ஆர்.பி.ஷர்மா கடுமையாக விமர்சித்திருந்தார். இதையடுத்து அவருக்கு எதிராக அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. 59 வயதாகும் ஆர்.பி.ஷர்மா வரும் டிசம்பரில் ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related articles

Recent articles

spot_img