
கோவிட் தடுப்பூசி போட்டக்கொண்ட 2 ஆண்டுகளில் மரணம் என்ற செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், அது போலியான தகவல் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள மக்கள் கொடிய கொரோனா வைரஸுக்கு எதிராக போராடி வரும் நிலையில், ஒரு சில பல வதந்திகளை பரப்பி மக்கள் மத்தியில் பீதியை உண்டாக்கி வருகின்றனர்.
கொரோனா பரவத் தொடங்கியது முதலே பல போலி செய்திகளும், வதந்திகளும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.. ஆன்லைனில் ஏராளமான தகவல்கள் கிடைத்துள்ள நிலையில், தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் எடுத்துக் கொண்ட இரண்டு ஆண்டுகளில் இறந்துவிடுவார்கள் என்று கூறி ஒரு படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இருப்பினும், இந்த கூற்று முற்றிலும் போலியானது என்றும் தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது என்றும் ஒரு PIB உண்மை அறியும் சோதனை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்திய பத்திரிகை பணியகமான PIB தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் இதுகுறித்து விளக்கமளித்துள்ளது.. “கோவிட் -19 தடுப்பூசிகளைப் பற்றி ஒரு பிரெஞ்சு நோபல் பரிசு பெற்றவரை மேற்கோள் காட்டி ஒரு படம் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
படத்தில் உள்ள கூற்று போலியானது. கோவிட் -19 தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது. இந்த படத்தை யாருக்கும் பார்வேர்டு செய்ய வேண்டாம் ” என்று தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 21.80 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி மருந்துகள் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் மாநிலங்கள் நேரடியாக தடுப்பூசிகளை வாங்குவதற்கும் அரசாங்கம் உதவுவதாகவும் கூறியுள்ளது. நாட்டில் இதுவரை மொத்தம் 19,60,51,962 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


