போலி நகைகளை விற்பனை செய்ததாக ஜி.ஆர்.டி நகைக்கடை மீது பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
விஜயலட்சுமி என்பவர் கடந்த 2015ஆம் ஆண்டு சென்னை தி.நகரில் உள்ள ஜி.ஆர்.டி நகைக் கடையில் 5 சவரன் தங்க நெக்லஸ் வாங்கியுள்ளார். கடந்த வாரம் நெக்லஸ் அறுந்துவிட பெங்களூரு சிட்டியில் உள்ள ஜி . ஆர் . டி நகைக் கடைக்குச் சென்று மாற்றித் தருமாறு கூறியுள்ளார் .
நகையை பரிசோதனை செய்த நகைக்கடை மேலாளர் , நகையின் உள்ளே அதிக அளவில் கண்ணாடி துகள்கள் இருப்பதாகவும் அதனால் தங்களால் மாற்ற முடியாது எனவும் கூறிவிட்டனர்.
தாங்கள் வாங்கிய நகை கடையிலேயே மாற்றிக் கொள்ளுங்கள் எனவும் தெரிவித்தனர். இதையடுத்து சென்னை வந்த விஜயலட்சுமி, தி.நகர் ஜி.ஆர்.டி நகை கடைக்குச் சென்று முறையிட்ட போது அவர்கள் அலட்சியமான முறையில் பதில் அளித்ததாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து விஜயலசுமி தி.நகர் துணை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். புகார் குறித்து பாண்டி பஜார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக சென்னை ஐயப்பயன் தாங்கல் பகுதியை சேர்ந்த மருத்துவர் ஒருவர் சரவணா ஸ்டோர்ஸ் நகைக் கடை மீது போலி நகை குறித்து புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் அடுத்ததாக ஜி.ஆர்.டி கடை மீது புகார் அளிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.