உத்தரகாண்ட் சார் தாம் தேவஸ்தான மேலாண்மைச் சட்டம், 2019 குறித்து ஆராய அம்மாநில முதல்வர் முதல்வர் புஷ்கர் சிங் தாமி அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு தனது இறுதி அறிக்கையை முதல்வரிடம் ரிஷிகேஷில் சமர்ப்பித்தது. இதை அடுத்து சர்ச்சைக்குரிய சார் தாம் தேவஸ்தான மேலாண்மை வாரிய சட்டத்தை ரத்து செய்வதாக முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார்.
டெஹ்ராடூன்: கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கோயில்களை மாநில கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த சார்தாம் தேவஸ்தான வாரியச் சட்டத்தை ரத்து செய்வதாக உத்தரகாண்ட் அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் மாதா வைஷ்ணோ தேவி ஆலய வாரியம் அமைப்பதற்கு வழிவகுத்த இந்தச் செயல், சார் தாம் கோவில்களின் அர்ச்சகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. கோவில்களை நிர்வகிப்பதற்கான அவர்களின் பல நூற்றாண்டுகள் பழமையான உரிமைகள் பறிப்பக்கப்படுவதாக அவர்கள் மாநில அரசு மீது தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள்.
இதனிடையே இந்தச் சட்டத்தை ரத்து செய்யும் நடவடிக்கை குறித்துப் பேசிய முதல்வர் புஷ்கர் சிங் தாமி, நவம்பர் 30-ஆம் தேதிக்குள் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட அர்ச்சகர்களுக்கு உறுதியளித்தார்.
சுற்றுலாத்துறை அமைச்சர் சத்பால் மகராஜ் தலைமையிலான அமைச்சரவைக் குழுவுடனும் பேசியது அர்ச்சகர்கள் குழு. முழுமையான ஆய்வுக்குப் பிறகு, அந்தக் குழுக்கள் சட்டத்தை ரத்து செய்யப் பரிந்துரைத்தன.
இதுகுறித்து ஆய்வு செய்த தியானி கமிட்டி தனது 89 பக்க அறிக்கையை ஞாயிற்றுக்கிழமை முதல்வரிடம் ஒப்படைத்தது. அதைத் தொடர்ந்து, சத்பால் மகாராஜ் கமிட்டி திங்கள்கிழமை தனது அறிக்கையை சமர்ப்பித்தது.
முந்தைய திரிவேந்திர ராவத் அரசாங்கத்தால் 2019 ஆம் ஆண்டில் மாநில சட்டசபையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதில் இருந்து மசோதாவுக்கு எதிராக போராடி வந்தது பூசாரிகள் சமூகம். இந்நிலையில், மாநில அரசின் இந்த நடவடிக்கையால் மகிழ்ச்சியடைந்த உத்தராகண்டில் உள்ள பூஜாரிகள் சமூகம், இனிப்புகளை விநியோகித்து சட்டம் திரும்பப் பெற்றதை கொண்டாடியது.
இந்த மாத தொடக்கத்தில், நவம்பர் 5 ஆம் தேதி பிரதமர் மோடியின் கேதார்நாத் வருகைக்கு முன், எதிர்ப்பு தெரிவித்த அந்த பூசாரிகள், சட்டத்தின் சிற்பி என்று கருதப்படும் முன்னாள் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்தை கேதார்நாத் கோவில் வளாகத்திற்குள் நுழைய விடாமல் தடுத்தது குறிப்பிடத் தக்கது.
இதனிடையே இந்த முடிவை விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு வரவேற்றுள்ளது. கடந்த ஏப்ரலில் நடைபெற்ற வி.ஹெச்.பி உயர்மட்ட கூட்டத்தில் இதனை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள வி.ஹெச்.பி, பாரதத்தின் அனைத்து மாநிலங்களிலும் ஹிந்து கோயில்களை அரசுகளின் பிடியில் இருந்து மீட்க பிரச்சார இயக்கம் தொடங்கப்படும் என அதன் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.