
கர்நாடகாவில் இறந்தவிட்டதாக கூறி அடக்கம் செய்யப்பட்ட தொழிலாளி, 3 மாதங்களுக்குள் பின் உயிருடன் வந்ததால், கிராம மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம், மதிகிரி அருகே உள்ள சிக்கமாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 59 வயதான கூலித்தொழிலாளி நாராஜப்பா. இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மதுபோதைக்கு அடிமையான நாராஜப்பா, பெங்களூருவில் உள்ள இளையமகள் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கும், மது அருந்திவிட்டு, வீட்டிற்கு செல்லாமல் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்துள்ளார். இதையடுத்து தந்தையை காணவில்லை என அவரது மகள் போலீசில் புகாரளித்துள்ளார்.
இந்நிலையில், அங்குள்ள தனியார் மருத்துவமனை அருகே, நாராஜப்பாவை போன்ற உருவ அமைப்பு கொண்டவர் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்குப் பின்னர், சொந்த ஊரில் மகள்கள் இருவரும் அவரது உடலை அடக்கம் செய்துள்ளனர். பின்னர், நாராஜப்பாவுக்கு இறப்பு சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்தான், திடீரென நாராஜப்பா, சொந்த ஊரான சிக்கமாலூர் கிராமத்திற்கு வந்துள்ளார். இறந்துவிட்டதாக கூறி 3 மாதங்களுக்கு முன் அடக்கம் செய்யப்பட்டவர் திடீரென உயிருடன் வந்ததால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்து வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இறந்தது நாராஜப்பா இல்லை என்பதும், அவரது உருவ ஒற்றுமை கொண்ட வேறு நபர் என்பதும் தெரியவந்தது.
நாராஜப்பா கூலி வேலை செய்துகொண்டு 3 மாதங்களாக ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, இறந்ததாக கூறி அடக்கம் செய்யப்பட்டவர் யார் என்பதை கண்டறியும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.