சென்னை:
மத்திய அரசு அறிவித்துள்ள பத்ம விபூஷண் விருதுக்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன்; பிரதமர் மோடி தலைமையிலான அரசு தமிழர்களுக்கும் தமிழகத்துக்கும் முக்கியத்துவம் அளிப்பதன் வெளிப்பாடு இது என்று மகிழ்ச்சியுடன் கூறினார் இசையமைப்பாளர் இளையராஜா.
விருது குறித்து தன்னிடம் செய்தித் துறை அதிகாரி பேசியதாகவும், விருதினை ஏற்றுக் கொள்ள சம்மதமா என்று கேட்டதாகவும் கூறிய இளையராஜா, தான் மகிழ்ச்சியுடன் அதனை ஏற்றுக் கொள்வதாகக் கூறினேன் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், அந்த நிகழ்ச்சியில் தாம் கலந்து கொள்வதாகவும் கூறினார்.
ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களை கௌரவப் படுத்தும் விதமாக மத்திய அரசு உயரிய விருதான பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷண், பத்ம பூஷண் விருதுகளை வழங்கி வருகிறது. இந்த வருடம் பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷண், பத்ம பூஷண் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
பாரத் ரத்னா விருதுக்கு அடுத்த நிலையில் உள்ள நாட்டின் 2வது உயரிய விருதான பத்ம விபூஷன் விருது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பத்ம விபூஷண் விருதுக்கு தேர்வாகியுள்ள இளையராஜாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். நடிகர் கமலஹாசனும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவருக்கு திரைத்துறையினர் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இளையராஜாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார் ரஜினிகாந்த். நடிகர் கமல் வழக்கம் போல் உடனடியாக தனது டுவிட்டர் பக்கத்தில் எனக்கு மூத்தவர் என் இளையராஜாவுக்கு விருது. விருதுக்கான தகுதியை இவர் இளமையிலேயே பெற்றிருந்தார். தாமதமாய் வந்த பெருமையை ராஜா போல் ரசிகரும் மன்னிப்பர். விருதும் நாடும் தமிழகமும் பெருமை கொள்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
அன்னக்கிளி என்ற படத்துக்கு 1976ல் இசை அமைத்து, தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர். இதுவரை 1000 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இளையராஜாவுக்கு ஏற்கெனவே கடந்த 2010ம் ஆண்டில் பத்ம பூஷண் விருது வழங்கப் பட்டுள்ளது. சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருதை பெற்றவர். 1988-ஆம் ஆண்டு மத்திய பிரதேச அரசின் லதா மங்கேஷ்கர் விருது 1995ஆம் ஆண்டு கேரள அரசின் விருது பெற்றிருக்கிறார்.
இன்று அறிவிக்கப் பட்டுள்ள பத்மஸ்ரீ விருது பெறுபவர்கள்…
கோவையை சேர்ந்த யோகா பயிற்சியாளர் ஞானம்மாள் (98)
அரவிந்த் குப்தா – இலக்கியம் & கல்வி
லட்சுமிகுட்டி – மருத்துவம்
பாஜு ஷியாம் – கலை
சுதன்ஷு பிஸ்வாஸ் – சமூக சேவை
எம்.ஆர். ராஜகோபால் – மருத்துவம்
முர்லிகந்த் பெட்கர் – விளையாட்டு
ராஜகோபாலன் வாசுதேவன் – அறிவியல் மற்றும் பொறியியல்
சுபாஷினி மிஸ்ட்ரி – சமூக சேவை
விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் – இலக்கியம் மற்றும் கல்வி
சுளகட்டி நரசம்மா – மருத்துவம்
யீஷிதொடன் – மருத்துவம்