புது தில்லி:
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை 5 நாள் சிபிஐ கண்காணிப்பில் எடுத்து விசாரிக்க தில்லி பாட்டியாலா நீதிமன்றம் அனுமதி அளித்தது.
முன்னதாக, லண்டனில் இருந்து திரும்பிய கார்த்தி சிதம்பரத்தை சென்னை விமான நிலையத்தில் புதன்கிழமை நேற்று காலை 7.30 மணி அளவில் தில்லி சிபிஐ அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரத்தில் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். குடியுரிமைத் துறை அதிகாரிகளின் அறையில் சுமார் 2 மணி நேர விசாரணைக்குப் பின்னர் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ அதிகாரிகள் அவரை, தனியார் விமானம் மூலம் தில்லிக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் தில்லி பாட்டியாலா வளாகத்தில் உள்ள பெருநகர நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி சுமீத் ஆனந்த் முன்பு கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். நீதிபதி, கார்த்தி சிதம்பரத்தை ஒரு நாள் சிபிஐ காவலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர், வேறு வழக்கமான நீதிபதியின் முன்னிலையில் ஆஜர்படுத்தி, காவலை நீட்டித்துக் கொள்ளுமாறு நீதிபதி கூறினார். இதை அடுத்து, கார்த்தி சிதம்பரத்தை வியாழக்கிழமை இன்று சிபிஐ அதிகாரிகள் நீதிபதி சுமீத் ஆனந்த் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது, கார்த்தி சிதம்பரத்துக்கு மார்ச் 6ஆம் தேதி வரை மேலும் 5 நாள் சிபிஐ காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
சிபிஐ காவலில் உள்ள இந்தக் காலகட்டத்தில் காலை மற்றும் மாலை 1 மணி நேரம் வரை தன்னுடைய வழக்கறிஞருடன் சந்தித்துப் பேச கார்த்தி சிதம்பரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுபோல பரிந்துரைகளின் அடிப்படையில் மருந்துகளை எடுத்துக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆயினும் வீட்டில் இருந்து எடுத்து வரும் உணவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.