புது தில்லி:
தில்லி திகார் சிறையில் அடுத்து வரும் 12 நாட்கள், அதாவது மார்ச் 24 வரை அடைக்கப்படும் கார்த்தி சிதம்பரத்துக்கு எவ்வித சலுகையும் வழங்கக் கூடாது என்று சிறைத் துறைக்கும் தில்லி பாட்டியாலா நீதிமன்ற நீதிபதி சுனில் ராணா கண்டிப்புடன் கூடிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
மத்திய நிதி அமைச்சராக தமிழகத்தைச் சேர்ந்த ப.சிதம்பரம் இருந்த போது அன்னிய முதலீடுக்கான தடையில்லாச் சான்றிதழுக்கு, தனது தந்தையின் நிதி அமைச்சர் என்ற செல்வாக்கைப் பயன்படுத்தி, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திடம் ரூ.10 லட்சம் தரகுத் தொகை பெற்றதாக, அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ., குற்றம் சாட்டியது.
இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ ., கைது செய்து விசாரித்து வருகிறது. அவரை தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் சிபிஐ ., 4 முறை ஆஜர்படுத்தி, ஒவ்வொரு முறையும் காவல் நீட்டிப்பு பெற்றது. தங்களின் விசாரணைக்கு கார்த்தி ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று கூறியது சிபிஐ.,
தொடர்ந்து, 4-ஆவது முறையாகக் கொடுக்கப்பட்ட நீதிமன்றக் காவல் முடிவடைந்த நிலையில் கார்த்தி சிதம்பரத்தை இன்று தில்லி பாட்டியாலா நீதிமன்ற நீதிபதி சுனில் ராணா முன்பு சிபிஐ., ஆஜர்படுத்தியது. அப்போது சிபிஐ அதிகாரிகள் , கார்த்தியை சிறையில் அடைக்க கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்ற நீதிபதி, கார்த்தி சிதம்பரத்தை திகார் சிறையில் 12 நாட்கள் அடைக்க உத்தரவிட்டார்.
அப்போது, தனது தந்தை முன்னாள் மத்திய அமைச்சர் என்பதால், வெளியிலிருந்து உணவு கொண்டு வருவது உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும்; தனி செல்லில் தான் அடைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நீதிபதி முன் வைத்தார் கார்த்தி.
ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதி, கார்த்தி சிதம்பரத்துக்கு சிறப்பு சலுகைகள் ஏதும் கிடையாது. தந்தை முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தாலும் எவ்வித சலுகையும் கொடுக்கக் கூடாது. மற்ற கைதிகளைப் போலவே கார்த்தியும் நடத்தப்பட வேண்டும். அவருக்கென தனி அறை ஒதுக்கக் கூடாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். இதை அடுத்து திகார் சிறைக்கு கார்த்தி சிதம்பரம் அழைத்துச் செல்லப்பட்டார்.