அஸ்ஸாமில் பிரமாண்ட பாலம் திறப்பு; நெடுஞ்சாலையில் விமானம் இறக்கி சாதனை!

Published:

pm modi inaugurates kumar baskar varma sethu in assam - 2026

அஸ்ஸாம் மாநிலத்தில் ரூ. 3,030 கோடியில் கட்டப்பட்ட ‘குமார் பாஸ்கர் வர்மா சேது’ பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். கௌஹாத்தி மற்றும் வடக்கு கௌஹாத்தியைப் பிரிக்கும் பிரம்மபுத்திரா ஆற்றின் மேல் மிகப் பிரமாண்டமாக கட்டப்பட்ட இந்தப் பாலம் ஒரே நேரத்தில் 6 வழித்தடங்களில் வாகனங்கள் செல்லும் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அஸ்ஸாாமின் திப்ருகர்க் மாவட்டத்தில் அவசர காலங்களில் விமானங்கள் தரையிறக்க ஏதுவாக வடிவமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் பிரதமர் மோடியின் விமானம் தரையிறக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டது.

அவசர காலங்களில் ராணுவம் மற்றும் பயணிகள் விமானம் பயன்படுத்தும் வகையில் பிரத்யேகமாக இந்த சாலை அமைக்கப்பட்டது. வடகிழக்கு மாநிலங்களில் அமைக்கப்பட்ட, அவசர காலங்களில் விமானம் தரையிறங்கும் முதல் தேசிய நெடுஞ்சாலை, இந்தியாவில் 11வது சாலை இது. சுமார் ரூ.100 கோடி செலவில், இந்திய விமானப்படை இந்த சாலையை வடிவமைத்து கட்டமைத்துள்ளது.

40 டன் வரையிலான போர் விமானத்தையும், 74 டன் எடை வரையிலான பயணிகள் விமானமும் இந்தச் சாலையை பயன்படுத்த முடியும். பேரிடர் மற்றும் அவசர காலங்களில் தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்த முடியும். இந்த நெடுஞ்சாலையில் தரையிறங்கிய பிறகு அங்கு நடந்த இந்திய விமானப்படை விமானங்களின் சாகசத்தை பிரதமர் பார்வையிட்டார்.

ALSO READ:  எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

சுகோய் சு 30 எம்கேஐ, ரபேல் உள்ளிட்ட போர் விமானங்கள், பயணிகள் விமானம், ஹெலிகாப்டர் ஆகியவை இந்த நெடுஞ்சாலையில் தரையிறக்கப்பட்டு, இங்கிருந்து கிளம்பிச் சென்றன. இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர், பிரதமர் மோடி கௌஹாத்தி கிளம்பிச் சென்றார்.

கௌஹாத்தியில் பிரதமர் மோடி, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பிறகு நடந்த கூட்டத்தில் பேசினார். அவரது உரையிலிருந்து…

இன்றைய தினம் இந்தியாவுக்கு அவசர காலத்தில் விமானம் தரையிறங்குவதற்கான நெடுஞ்சாலை மட்டும் கிடைக்கவில்லை. இது இந்தியா தனது பாதுகாப்புக்கு புதிய வழிகளை கண்டறிந்து வருகிறது என்பதற்கான சான்றாக அமைந்திருக்கிறது.

இந்நாளில் புல்வாமா தாக்குதலின் 7 வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதலுக்கு காரணமானவர்களை இந்தியா எப்படி தண்டித்தது என்பதை உலக நாடுகள் பார்த்தன. இதனால் சிலர் இன்னும் பயத்தில் உள்ளனர். ஆப்பரேஷன் சிந்தூரின் சக்தியை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

நாட்டின் நலனுக்காக காங்கிரஸ் முடிவு முடிவு எடுக்கும் என்பதை நாம் எதிர்பார்க்க முடியுமா? முன்னர் அக்கட்சி அதனைச் செய்துள்ளதா? வெறும் அறிக்கை மட்டுமே வெளியிடும்; ஆனால் ஒன்றுமே செய்யாது. இந்தியாவை ஒரு நாடாக காங்கிரஸ் இன்னும் அங்கீகரிக்கவில்லை! அன்னை பாரதம் என்றால் என்ன என அக்கட்சி கேள்வி எழுப்புகிறது. பாரதத்தின் நலனுக்கு அக்கட்சி ஒன்றும் செய்யவில்லை. அன்னை பாரதம் எனக்கூட காங்கிரஸ் சொல்லாது. அதற்கு மரியாதை கொடுக்காது. நாட்டின் பாதுகாப்புக்கு எப்போதும் காங்கிரஸ் முக்கியத்துவம் அளித்தது இல்லை!

ALSO READ:  சாவர்க்கரும் ஜனநாயகமும்

காங்கிரஸ் நாட்டை எப்போதும் அச்சத்திலேயே வைத்து இருந்தது. காங்கிரசின் எதிர்மறைச் சிந்தனை காரணமாக வடகிழக்கு மாநில மக்கள் பயத்துடனும் பாதுகாப்பற்ற சூழ்நிலையிலும் வாழ்ந்து வந்தனர். காங்கிரஸ் ஆட்சியில் எப்போதெல்லாம் ஆயுதங்கள் வாங்கப்படுகிறதோ அப்போதெல்லாம், கோடிக்கணக்கில் ஊழல் நடக்கும்.

இன்று ராணுவத்தை பாரதம் பலப்படுத்தி வருகிறது. மிகப்பெரிய நெடுஞ்சாலைகள், சுரங்கங்கள், பாலங்கள் மற்றும் நவீன ஓடுபாதைகளை அமைத்து வருகிறது. நாட்டைப் பிரிக்க நினைப்பவர்களையும், வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவில் இருந்து பிரிக்க நினைப்பவர்களையும் காங்கிரஸ் ஆதரிக்கிறது. அவர்கள், காங்கிரசின் ஆதரவாளர்களாக மாறிவிட்டனர்.

சுதந்திரத்தின் போது முஸ்லிம் லீக் நாட்டைப் பிரித்தது. தற்போது காங்கிரஸ், முஸ்லிம் லீக் மாவோயிஸ்ட் காங்கிரஸாக மாறிவிட்டது. இதனால், காங்கிரஸிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தில்லி அல்லது அஸ்ஸாமில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, அக்கட்சி அஸ்ஸாமை கைவிட்டுவிட்டது. அஸ்ஸாமின் வளர்ச்சியிலும், மக்களின் வாழ்வாதாரத்திலும், பிரம்மபுத்ரா முக்கியமானதாக இருந்தது. ஆனால், காங்கிரஸின் 70 ஆண்டு கால ஆட்சியில், இந்த நதியைக் கடப்பது பெரிய சவாலாக இருந்தது.

ALSO READ:  தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

இதுபோன்ற சூழ்நிலையில் அஸ்ஸாமின் வளர்ச்சி எப்படி சாத்தியம். 2014 ல் நாட்டிற்கு சேவை செய்ய உங்களால் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு 2, 3 ஆண்டுகளில் பாஜக தொண்டர்கள் இரட்டை இன்ஜின் அரசை உருவாக்கினார்கள். இதனால், கடந்த 10, 11 ஆண்டுகளில் பாஜக தலைமையிலான தேஜ கூட்டணி அரசு, பிரம்மபுத்ரா நதியில் 5 பெரிய பாலங்களைக் கட்டியுள்ளது. அஸ்ஸாமுக்கு காங்கிரஸ் தொந்தரவை மட்டுமே கொடுத்தது; ஆனால் பாஜக தீர்வை வழங்குகிறது – என்று பேசினார் பிரதமர் மோடி. 

Related articles

Recent articles

spot_img