
ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி: ஏழாம் நாள் 13.02.2026
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
இன்று (13.02.2026) முதல் ஆட்டத்தில் காலை 1100 மணிக்கு கொழும்புவில் நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய ஜிம்பாபே அணிகளும் இரண்டாவது ஆட்டத்தில் மதியம் 0300 மணிக்கு டெல்லியில் கனடா ஐக்கிய அரபு எமிரேட்டு அணிகளும் மூன்றாவது ஆட்டத்தில் இரவு 0700 மணிக்கு சென்னையில் நெதர்லாந்து அமெரிக்க அணிகளும் விளையாடின.
போட்டியின் முதல் அப்செட்; ஜிம்பாபே ஆஸ்திரேலியாவை வென்றது
பூவாதலையா வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் முதலில் மட்டையாடவந்த ஜிம்பாபே அணியின் தொடக்க வீரர்கள் ப்ரியன் பென்னட் (56 பந்துகளில் 64 ரன்) மற்றும் தடிவனஷே மருமணி (21 பந்துகளில் 35 ரன்) சிறப்பான தொடக்கம் தந்தனர். அதன் பின்னர் விளையாட வந்த ரியான் பர்ல் (30 பந்துகளில் 35 ரன்) சிக்கந்தர் ராசா (13 பந்துகளில் 25 ரன்) ஆகியோரும் சிறப்பாக விளையாடியதால் ஜிம்பாபே அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கட் இழப்பிற்கு 169 ரன் எடுத்தது. இரண்டாவதாக விளையாடவந்த ஆஸ்திரேலிய அணியில் மேட் ரென்ஷா (44 பந்துகளில் 65 ரன்), கிளன் மேக்ஸ்வெல் (32 பந்துகளில் 31 ரன்), ட்ராவிஸ் ஹெட் (15 பந்துகளில் 17 ரன்) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ஸ்கோரை எட்டினர். மற்ற பேட்டர்கள் சரியாக விளையாடவில்லை. இதனால் 19.3 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து ஆஸ்திரேலிய அணி 146 ரன்கள் மட்டுமே எடுத்து அதிர்ச்சித் தோல்வியடைந்தது. இதுவரை நடந்த டி20 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி ஜிம்பாபே அணியை இதுவரை ஒருமுறை கூட வெற்றிபெறவில்லை.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்- கனடா அணிகள் ஆட்டம்; ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி வெற்றி
பூவாதலையா வென்ற கனடா அணி முதலில் மட்டையாட முடிவுசெய்தது. அந்த அணியின் ஹர்ஷ் தாக்கர் (41 பந்துகளில் 50 ரன்), நவனீத் தலிவால் (28 பந்துகளில் 34 ரன்) மற்றும் ஷ்ரேயாஸ் முவ்வா (21 பந்துகளில் 21 ரன்) ஆகியோர் மட்டுமே நன்றாக ஆடினர். பிறர் ஜொலிக்கவில்லை. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கட் இழப்பிற்கு 150 ரன் எடுத்தது. இரண்டாவதாக ஆடிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியின் தொடக்க வீரர், ஆர்யான்ஷ் ஷர்மா (53 பந்துகளில் 74 ரன், 6 ஃபோர்கள், 4 சிக்சர்) மற்றும் ஷோஹிப் கான் (51 ரன்) இருவரும் சிறப்பாக ஆடினார்கள். இதனால் அந்த அணி 19.4 ஓவர்களில் 5 விக்கட் இழப்பிற்கு 151 ரன் எடுத்து வெற்றிபெற்றது.
அமெரிக்க – நெதர்லாந்து ஆட்டம்; அமெரிக்க அணி அபார வெற்றி
பூவாதலையா வென்றா நெதர்லாந்து அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் மட்டையாட வந்த அமெரிக்க அணியின் மட்டையாளர்கள் சிறப்பாக ஆடினர். அந்த அணியின் மொனாங்க் படேல் (27 பந்துகளில் 36 ரன்), ஷயான் ஜஹாங்கீர் (14 பந்துகளில் 20 ரன்), முக்கமாலா (51 பந்துகளில் 79 ரன், 5 ஃபோர், 4 சிக்சர்), ஷுபம் ரஞ்சனே (24 பந்துகளில் 48 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்) ஆகியோர் வேகமாக ரன் குவித்தனர். அதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கட் இழப்பிற்கு 196 ரன் எடுத்தது. அதன் பின்னர் ஆடவந்த நெதர்லாந்து அணியின் மட்டையாளர்கள் அமெரிக்க அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 15.5 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 103 ரன் மட்டுமே எடுத்தனர். அதனால் அமெரிக்க அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அமெரிக்க அணியின் ஹர்மீத் சிங் 4 விக்கட்டுகளையும் ஸ்கால்வைக் 3 விக்கட்டுகளையும் வீழ்த்தினர். ஹர்மீத் சிங் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.




