
பிரபல தொலைக்காட்சித் தொடர் நடிகை ஒருவர் எரிந்த நிலையில் பிணமாகக் கிடந்தது கண்டறியப்பட்டது கேரளத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளத்தைச் சேர்ந்தவர் கவிதா (வயது35). மலையாள தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருகிறார். அவருக்கு திருமணமாகி 4 வயதில் ஒரு மகளும் உள்ளார். அவரது கணவர் தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார். கணவன், மனைவி இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு இருவரும் தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
கவிதாவுக்கு பெங்களூரில் அழகு நிலையம் ஒன்று தொடங்க எண்ணம் இருந்துள்ளது. அதற்காக அவருக்கு உரிய தொகை கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கவிதா தனது வீட்டில் எரிந்த நிலையில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கவிதா கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளதாக போலீஸார் கூறியுள்ளனர். கவிதாவின் கையில் மின்சார வயர் இருந்துள்ளது.
மேலும் அவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டதற்கான தடயங்களும் இருந்துள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கணவனைப் பிரிந்து வாழும் நிலையில் நடிகை ஒருவர் எரிந்த நிலையில் சடலமாகக் கிடந்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



