மும்பையை சேர்ந்த புலனாய்வு பத்திரிகையாளர் ஜோதிர்மாய் டே. சுருக்கமாக ஜே டே என்றழைக்கப்பட்ட இவர் நிழல் உலக தாதா சோட்டா ராஜன் குறித்து எதிர்மறையான கட்டுரைகளை எழுதி வந்தார். கடந்த 2011 ஜூன் 11-ம் தேதி மும்பை புறநகர்ப் பகுதியில் மர்ம நபர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் நிழல் உலக தாதா சோட்டா ராஜன், பெண் நிருபர் ஜிக்னா வோரா உட்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் வினோத் செம்பூர் என்பவர் உயிரிழந்துவிட்டார். கடந்த 2016 அக்டோபரில் இந்தோனேசியாவின் பாலி விமான நிலையத்தில் சோட்டா ராஜன் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டார்.
அவர் தற்போது டெல்லி திகார் சிறையில் உள்ளார். சோட்டா ராஜன் அளித்த வாக்குமூலத்தில் நிழல்உலக தாதா தாவூதுடன் நெருக்கம் காட்டியதால் ஜே டேவை கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.
மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஜே டே வழக்கு நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி சமீர் அட்கர் இன்று தீர்ப்பு வழங்கினார். ஜே டே கொலை வழக்கில் சோட்டா ராஜன் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்தார். சோட்டா ராஜனின் உத்தரவின் பேரிலேயே இந்த கொலை நடந்ததை உறுதி செய்வதாகவும் அவர் கூறினார்.
அதேசமயம் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பத்திரிக்கையாளர் ஜிக்னா வோராவைர விடுவித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


