புதுதில்லி :
தீபாவளியன்று பட்டாசு வெடிக்க புதிய கட்டுப்பாடு ஏதும் விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீதிபதிகள் தத்து மற்றும் அருண் குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசு வெடிக்க தடை விதித்து உத்தரவிட்ட நிலையில், இது ஏற்கெனவே அமலில் உள்ளது. இந்நிலையில், தில்லியைச் சேர்ந்த மூவர், தில்லியில் காற்று மாசுபாடு அதிகரிக்காமல் தடுக்க தீபாவளியன்று பட்டாசு வெடிக்க முற்றிலுமாக தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். தீபாவளி தினத்தன்று 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும் என மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
இந்த மனுவை அக்.28 இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்தது. பட்டாசுகள் வெடிப்பதற்கு புதிய கட்டுப்பாடோ அல்லது வழிகாட்டுதலோ விதிக்க முடியாது என தெரிவித்தது. மேலும் பட்டாசு பொருட்கள் மீது அபாய எச்சரிக்கை பொருத்த வேண்டும் என அக்டோபர் 16ம் தேதி விதித்த உத்தரவை மத்திய அரசு இன்னும் அமல்படுத்தவில்லை என கண்டித்தது.
வெடி பொருட்கள் மீது அபாய வாசகங்கள் அல்லது குறியீடுகளை அக்டோபர் 31ம் தேதி முதல் நவம்பர் 12 வரை வெளியிட மத்திய அரசுக்கு நெறிமுறைகளையும், வழிகாட்டுதலையும் விதிக்க வேண்டும் என அரசு தலைமை வழக்கறிஞரை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.


