பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள பிஷப் பிராங்கோ முல்லக்கல் நெஞ்சுவலியால் அவதிப் பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு இன்று டிஸ்சார்ஜ் செய்யப் பட்டார்.
கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான முன்னாள் பிஷப் பிராங்கோ கோட்டயம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டார். இந்நிலையில் இன்று அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப் பட்டார்.
மருத்துவமனையில் அவரை பரிசோதித்த டாக்டர்கள், பிஷப்புக்கு ரத்தம் அழுத்தம் அதிகரித்து காணப்படுவதாகவும், லேசான நெஞ்சு வலி இருப்பதாகவும் கூறினர். மேலும் இசிஜி உள்ளிட்ட இதயம் தொடர்பான பரிசோதனைகள் பிஷப்பிற்கு எடுக்கப்பட்டது. அவரது உடலில் பெரிய அளவில் பிரச்னை ஏதுமில்லை.
சிகிச்சைக்கு பின்னர் பிஷப்பை பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்ற போலீசார் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
கேரள கன்யாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டதாக அளிக்கப் பட்ட புகாரின் பேரில் நீண்ட இழுபறிக்குப் பின் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப் பட்டு 87 நாட்கள் கழித்து விசாரணைக்கு ஆஜரானார் பிஷப் பிராங்கோ. பின்னர், 3 நாள் விசாரணைக்குப் பின் கைதான பிராங்கோ நெஞ்சுவலி இருப்பதாக கூறியதால் அவருக்கு சிகிச்சை தரப்பட்டது.
முன்னதாக, கேரள கன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் முன்னாள் பேராயர் ஃபிராங்கோ முலக்கல் கைது செய்யப்பட்டார். ஜலந்தர் பேராயராக இருந்த ஃபிரான்கோ முல்லக்கல் கேரளாவுக்கு வந்த போது 2014 முதல் 2016 வரை தன்னை 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரி புகார் கூறியிருந்தார்.
இது தொடர்பான வழக்கு விசாரணைக்காக போலீசாரால் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் முலக்கல் திருப்புனித்துராவில் உள்ள கேரள குற்றப்பிரிவு காவல் அலுவலகத்தில் நேற்று முன் தினம் ஆஜரானார்.
அவரிடம் கடந்த 3 நாட்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அவர் அளித்த தகவல்களின் பேரில் பல்வேறு இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகலுக்கு மேல் ஃபிரான்கோ முல்லக்கல் கைது செய்யப்பட்டார். இதனிடையே போலீசார் ஃப்ராங்கோ மூலக்கல்லுக்கு எதிராக வழக்கை ஜோடிக்க முயற்சி செய்வதாக கேரள எம்.எல்.ஏ. பி.சி.ஜார்ஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் நேரத்துக்குப் பின்பு பேராயருடன் கன்னியாஸ்திரி மகிழ்ச்சியான முகபாவத்தில் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ தன்னிடம் இருப்பதாகவும் அதை விசாரணைக் குழுவிடம் சமர்ப்பிக்கத் தயாராக இருப்பதாகவும் ஆனால், அதனை போலீசார் ஆதாரமாக ஏற்கவில்லை என்றும் கூறியுள்ள அவர், விசாரணை அதிகாரிகளில் ஒருவர் புகைப்படக் கலைஞரை மிரட்டி முலக்கல்லுக்கு எதிராக வாக்குமூலம் பெற்றுள்ளதாகவும் பி.சி.ஜார்ஜ் குற்றம்சாட்டினார்.




