கர்நாடகாவில் மருத்துவ வசதி இல்லாத கிருஷ்ணபுரா என்ற கிராமத்தில் 15 ஆயிரம் பெண்கள் வரை பிரசவம் பார்த்தவரும், அதற்கு அங்கீகாரம் பெறும் விதத்தில், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான, சுலகிட்டி நரசம்மா தனது 98 ஆவது வயதில் இன்று காலமானார்.
கர்நாடகாவின் பவகாடா தாலுகாவின் குக்கிராமமான கிருஷ்ணாபுராவில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரசவங்களை எளிய முறையில் வெற்றிகரமாகப் பார்த்தவர் நரசம்மா. இவர் 4 மகன்கள், 3 மகள்கள், 36 பேரக் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார்.
உடல் நலக் குறைவு காரணமாக பெங்களூர் கெங்கேரியில் கேஜிஎஸ் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். மூச்சுக்குழலில் ஏற்பட்ட பிரச்னையால் கடந்த 5 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நரசம்மா, செவ்வாய்க்கிழமை இன்று மதியம் 3 மணிக்கு காலமானார்.