ஜிகா பாதிப்புள்ள நாடுகளில் இருந்து இந்தியா வருவோரை விமான நிலையத்திலேயே சோதனை செய்ய மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கர்ப்பத்தில் வளரும் குழந்தைகளை தாக்கும், கொடிய ‘ஜிகா’ (zika virus) வைரஸ், கரீபியன் மற்றும் அமெரிக்க நாடுகளில் வெகுவேகமாக பரவி வருகிறது.
இந்த வைரசால், கர்ப்பத்தில் வளரும் குழந்தைகளுக்கு நரம்பியல் தொடர்பான கோளாறுகள் ஏற்படும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், ‘ஜிகா’ வைரஸ் பாதிப்புள்ள 24 நாடுகளுக்கு செல்வதை கர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், இந்தியாவில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும், கரீபியன் மற்றும் அமெரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகள் காய்ச்சல், உடல் அரிப்பு, விழி வெண்படல அழற்சி மற்றும் தசை வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் அது குறித்து தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


