மத்திய நிதி அமைச்சர் (பொறுப்பு) பியூஷ் கோயல் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் இன்று நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப் பட்டது. அப்போது காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
முன்னதாக, பட்ஜெட் குறித்து காரசார விவாதம் இன்று நடந்தது. அப்போது, அதிமுக.,வைச் சேர்ந்த உறுப்பினரும், மக்களவை துணை சபாநாயகருமான மு.தம்பிதுரை, பட்ஜெட் குறித்து கடுமையாக விமர்சித்தார்.
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தேர்தல் அறிக்கைபோன்று உள்ளது. விவசாயிகளுக்கு குறைந்தது 12 ஆயிரம் ரூபாயாவது வழங்க வேண்டும். தற்போது அறிவித்த சலுகைகளை ஏன் 2018ஆம் ஆண்டு அறிவிக்கவில்லை என்றார் தம்பிதுரை எம்.பி.!
மேலும், மாநில அரசின் உரிமைகளை பறிப்பதில் காங்கிரஸ் அரசுக்கும் பாஜக அரசுக்கும் எந்த வித்தியாசமுமில்லை என்று கூறிய தம்பிதுரை, மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு, குறு தொழிலாளர்களுக்கு என்ன நன்மை கிடைத்தது? ஜிஎஸ்டி மூலம் மாநில அரசுகளின் அதிகாரத்தை மத்திய அரசு பறித்துவிட்டது என்று கூறினார்.