திருவனந்தபுரம்:
பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் நாகரிகம் குறித்துக் கேள்வி எழுப்பிய கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு அந்த மாநில பாஜக பதிலடி கொடுத்துள்ளது.
அண்மையில் கேரளத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, கேரள பழங்குடி இனத்தவர் முன்னேற்றம் குறித்து பேசியபோது, சோமாலியா நாட்டுடன் ஒப்பிட்டுப் பேசினார். இதனைக் கண்டித்து கேரள முதல்வர் உம்மன் சாண்டி, மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.
அதில், கேரளத்தை சோமாலியாவுடன் ஒப்பிட்டுப் பேசியது மாநிலத்தை அவமதிக்கும் செயல் என்றும், பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் என அனைத்துத் துறைகளிலும் தேசிய சராசரியைவிட கேரளம் உயர்வாகவே உள்ளது என்றும் சாண்டி சுட்டிக்காட்டியிருந்தார். மேலும், கேரளம் குறித்த தவறான கருத்தைத் திரும்பப் பெறுவதன் மூலம் அரசியல் நாகரிகத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சாண்டி வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் கேரள மாநில பாஜக தலைவர் கும்மணம் ராஜசேகரன் திருவனந்தபுரத்தில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் இது தொடர்பாகக் கூறியதாவது:
அண்மையில் கண்ணூர் மாவட்ட மலைவாழ் மக்கள் காலனியில் இரு சிறார்கள் குப்பைத் தொட்டியில் இருந்து உணவைத் தேடிய செய்தி வெளியாகி, தேசத்தின் மனசாட்சியையே உலுக்கியது. இதுபோன்ற சூழ்நிலையில் கேரளத்தில் பிரதமர் மோடி பேசிய விஷயங்கள் தவறானவை அல்ல.
கேரளத்தில் அரசு சரியாக செயல்பட்டிருந்தால், இரு சிறார்கள் உணவுக்காக குப்பைத் தொட்டியைத் தேட வேண்டிய அவலநிலை ஏற்பட்டிருக்காது. அட்டப்பாடியில் 143 சிறார்கள் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் உயிரிழந்துள்ளனர். இவற்றையெல்லாம் முதல்வர் உம்மன் சாண்டி மறந்துவிட்டார்.
மாநிலத்தில் பட்டினிச் சாவைச் தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்பதை அவர் முதலில் விளக்க வேண்டும். மாநிலத்தைப் பற்றி சாண்டி கூறும் புள்ளி விவரங்களுக்கும் உண்மை நிலவரத்துக்கும் இடையே அதிர்ச்சியளிக்கத்தக்க வேறுபாடுகள் உள்ளன என்றார் ராஜசேகரன்.




