போபால்: கோட்சேவை தேசபக்தர் எனக் கூறி பின்னர் அதற்காக அவர் வருத்தமும் மன்னிப்பும் கேட்ட போதிலும், சாத்வி பிரக்யா தாகூரை என்னால் மன்னிக்கவே முடியாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பிரக்யா சிங் தாக்குர் மன்னிப்பு கேட்டுள்ள போதிலும் என்னால் அவரை மன்னிக்கவே முடியாது என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.
மத்திய பிரதேச மாநிலம் போபால் தொகுதி பாஜக., வேட்பாளர் பிரக்யா சிங் தாக்குர், கமல்ஹாசன் கோட்சே ஒரு ஹிந்து தீவிரவாதி என்று குறிப்பிட்டு சர்ச்சையைக் கிளப்பிய பின்னர், நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர். அவர் தேச பக்தராகவே இருப்பார். அவரை தீவிரவாதி எனக் கூறுபவர்கள் தங்களைத் தாங்களே உற்றுநோக்க வேண்டும். இதுபோன்ற கருத்துக்களை கூறுபவர்களுக்கு மக்கள் இந்த தேர்தலில் தக்க பதிலடி கொடுப்பார்கள் எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், பிரக்யா சிங் தாக்குரின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது. எதிர்க்கட்சிகள் பிரக்யா சிங் தாக்குரின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தன. இதனால், பாஜக.,வும் பிரக்யாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. தற்போது பிரதமர் நரேந்திர மோடியும் பிரக்ய சிங் தாக்குருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மேலும் இருவர் கூறிய கருத்துகள் சர்ச்சை ஆகின. இதை அடுத்து பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா இவர்களின் கருத்துகள் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர், அனந்த் குமார் ஹெட்ஜே, பிரக்யா சிங் தாகூர், நிதின் கடேல் ஆகியோர் பேசியதெல்லாம் அவர்களின் சொந்தக் கருத்துகள். அவை பாஜக.,வின் அதிகாரபூர்வ கருத்துகள் அல்ல. பாஜக,.,வுக்கும் அவர்களின் கருத்துகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை! என்று கூறினார்.
இதனால், இம்மூவரும் தாங்கள் தெரிவித்த கருத்துகளை திரும்பப் பெற்றதுடன் அதற்காக தாங்கள் வருந்துவதாகவும், மன்னிப்பு கேட்பதாகவும் கூறினர். இது குறித்து கருத்து தெரிவித்த அமித்ஷா, இம்மூவரின் கருத்துகள் குறித்து விசாரிக்க கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு அனுப்பப் பட்டுள்ளது என்றார்.