மக்கள் என் பக்கம் உள்ளனர். நாட்டு மக்கள் அனைவரும் எனக்கு ஆதரவாக உள்ளனர். அவர்களின் ஒருமித்த ஆதரவுடன் மத்தியில் மீண்டும் பாஜக., ஆட்சிக்கு வரும் என்று உறுதிபடக் கூறினார் பிரதமர் மோடி.
17வது மக்களவைக்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் தேர்தல் பிரசாரம் நிறைவடைவதற்கு சில மணி நேரம் முன், பாஜக., தலைவர் அமித் ஷா ஒரு பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். பாஜக., தலைமை அலுவலகத்தில் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
எவரும் எதிர்பாராத வகையில், பிரதமர் மோடியும் அமித் ஷாவின் பின்னர் நடந்து வந்த போது, பத்திரிகையாளர்கள் ஆச்சரியப் பட்டனர். கடந்த 5 வருடங்களில் பிரதமர் எந்த பத்திரிகையாளர் சந்திப்பையும் நடத்தவில்லை. முதல்முறையாக அவர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டதால், அனைவரிடமும் ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், அமித் ஷாவே பத்திரிகையாளர்களின் கேள்விகளை எதிர்கொண்டார். இருப்பினும், பிரதமர் மோடி ஒரு அறிமுக உரையை மட்டும் கொடுத்து விட்டு ஒதுங்கி கொண்டார். காரணம் இது அமித்ஷாவின் பத்திரிகையாளர் சந்திப்பு என்று கூறினார்.
பிரதமர் மோடி பேசியபோது, ஒரு பண்டிகையைப் போல் கிரிக்கெட்டைப் போல், தேர்தலும் திருவிழாவாக நடக்கிறது. ஜனநாயகத்தை நாம் இணைந்து கொண்டாடுவோம். தேர்தலை வெற்றிகரமாக நடத்த உதவியதற்கு நன்றி!
கடந்த 2 தேர்தல்களின் போதும், பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடக்கவில்லை. மத்தியில் வலிமையான அரசு அமையும் போது பிரிமியர் லீக் கிரிக்கெட், பள்ளித் தேர்வுகள் போன்றவை அமைதியாக நடந்தன. நாட்டில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இரண்டாவது முறையாக எங்களது அரசு முழு மெஜாரிட்டியுடன் மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வரவுள்ளது.
மக்களின் ஒருமித்த ஆதரவு மகிழ்ச்சி அளிக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் எனக்கு ஆதரவளித்தனர். தேஜகூ., மீண்டும் ஆட்சிக்கு வர மக்கள் விரும்புகின்றனர்.
நான் தேர்தல் பிரசாரத்துக்காக பல இடங்களுக்கும் சென்ற போது, கடந்த 5 ஆண்டு ஆட்சிக்கு நன்றி சொல்லும் வாய்ப்பு கிடைத்தது. நாங்கள் ஏழைகளின் துயர் துடைப்பதற்கான அரசை வழங்கினோம்.
கடந்த 2014 தேர்தலை விட இந்தத் தேர்தல் பிரசாரம் பெரிய அளவில் இருந்தது. இந்தப் பிரசாரத்தில் எனது ஒரு கூட்டம்கூட ரத்து செய்யப்படவில்லை. பாஜக.,வுக்கு வாக்களிக்க மக்கள் மனதளவில் தயாராக இருந்தனர். என்னை ஆசிர்வதித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்… என்றார் பிரதமர் மோடி.
தொடர்ந்து, கட்சித் தலைவர் அமித் ஷா பேசுகையில், மக்களவைத் தேர்தல் இறுதிக் கட்ட பிரசாரத்தை முடித்துள்ளோம். நாடு முழுவதும் பிரதமர் மோடி 142 பொதுக் கூட்டங்களில் பங்கேற்றார். மக்கள் அளித்த வரவேற்புக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
கடந்த 2014 ல் மக்கள் அளித்த ஆதரவுடன் வரலாற்று வெற்றி பெற்றோம். மீண்டும் மோடி அரசு மத்தியில் வரும் என்று நம்புகிறோம். 2014 ல் இருந்ததை விட தற்போது
கூடுதலாக பல மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்துள்ளோம்.
ஏழைகள், விவசாயிகள், பெண்கள் நலனைக் கருத்தில் கொண்டு ஆட்சி செய்தோம். கடந்த 5 ஆண்டுகளில் 133 திட்டங்களைக் கொண்டு வந்துள்ளோம். வீடு, சமையல் காஸ் என பிரதமர் மோடியின் பல்வேறு நலத்திட்டங்களில் 50 கோடி பேர் பயன் பெற்றுள்ளனர்.
மோடியின் ஆட்சியில் மக்கள் பாதுகாப்பாக உள்ளதாக உணர்கின்றனர். ஊழல், பண வீக்கம் விலைவாசி பாஜக., ஆட்சியில் கட்டுக்குள் உள்ளது. பெரும் மெஜாரிட்டியுடன் மீண்டும் ஆட்சி அமைப்போம்.. என்றார்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு அமித் ஷாவே பதிலளித்தார்.
LIVE: Shri @AmitShah is addressing a press conference in the presence of PM Shri @narendramodi at BJP HQ. #DeshKaGauravModi https://t.co/PyeR1mudj9
— BJP (@BJP4India) May 17, 2019