என்ன அராஜகம்?! இது என்ன மொஹலாயர் ஆட்சியா? நவ பிருந்தாவனத்தை நாசம் செய்திருக்கிறார்களே..!

Published:

navabrindavan2 - 2026மிகவும் அதிர்ச்சிகரமான சம்பவமாக, கர்நாடக மாநிலம் கொப்பலில் உள்ள நவ பிருந்தாவனத்தில் ஹிந்துக்களின் மனத்தைப் புண்படுத்தும் வகையில், மகான்களின் ஜீவசமாதிகள் தகர்த்தெறியப் பட்டுள்ளன.

லட்சக்கணக்கான பக்தர்களின் மத உணர்வுகளை சீர்குலைக்கும் வகையில் மிக மோசமான நாளாக இன்று விடிந்திருக்கிறது. மகான்களுக்கு மதிப்பு செய்யும் நாளான, குரு வாரமான வியாழக்கிழமை இன்று அதிகாலை ஹைதராபாத்-கர்நாடகா பகுதியின் கொப்பல் மாவட்டத்தில் ஆனேகொண்டியில் துங்கபத்ரா ஆற்றின் கரையில் அமைந்துள்ள வியாசராஜரின் பிருந்தாவனம் (நவ பிருந்தாவனம்) இன்று சமூக விரோதிகளால் முற்றிலும் தகர்க்கப் பட்டுள்ளது.

இந்த கோரமான சம்பவம் வியாழக்கிழமையான இன்று, புனித நாளில் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. குறிப்பாக, ஆஷாட ஏகாதசி மற்றும் சாதுர்மாஸ்ய சடங்குகளை நடத்தும் மாத்வ சம்பிரதாயத்தைச் சேர்ந்த அன்பர்களும், பக்தர்களும் கடுமையான மனவலியுடன் வேதனை அடைந்துள்ளனர்.

navabrindavan1 - 2026வியாழக்கிழமை இன்று அதிகாலைதான் இந்தக் கோரமான கட்சி, அன்பர்களின் கண்களில் பட்டுள்ளது. நேற்று நள்ளிரவில் வியாசராஜரின் பிருந்தாவனத்தை சமூகவிரோதிகள் தாக்கி அழித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக சரித்திரப் புகழ்பெற்ற நகரமான ஆனேகொண்டி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிருந்தாவனத்தை அலங்கரிப்பதற்காக அழகாக அமைக்கப் பட்டிருந்த செதுக்கப்பட்ட கற்களை எல்லாம் உடைத்து, அடியோடு பிடுங்கி எறிந்து, அதன் கட்டமைப்பை சீர்குலையச் செய்து, முழு பிருந்தாவனத்தையும் தோண்டி எடுத்திருக்கிறார்கள்…என்று ஆணேகொண்டி வாழ் பக்தர் கண்ணீர் சிந்தியபடி விவரித்துள்ளார்.

navabrindavan8 - 2026இந்தச் சம்பவம் குறித்து அறிந்த கங்காவதி போலீசார், உடனே பிருந்தாவனம் இருக்கும் இடத்துக்கு விரைந்து வந்து, சேதமடைந்த இடத்தை ஆய்வு செய்தனர். தொடக்கத்தில் இது குறித்து தங்களது சந்தேகத்தை வெளிப்படுத்திய காவல்துறை அதிகாரிகள், புதையல் வேட்டையாடுபவர்களின் கைவண்ணமாக இது இருக்கலாம், அவர்கள் ஹைதராபாத் கர்நாடகா பகுதி முழுவதும் பழங்கால மற்றும் இடைக்கால கோவில்களை புதையலுக்காக குறிவைத்து செயல்பட்டு வருகின்றனர் என்று கூறினர்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!

சமூக விரோதிகளின் இந்த மோசமான செயலை அடுத்து, ஆனேகொண்டியைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுதப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பகுதியில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தடுக்க கூடுதல் படைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

navabrindavan9 - 2026சமூக விரோதிகளின் இந்த நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்த உத்தராதி மடத்தின் சத்யாத்ம தீர்த்த ஸ்ரீபாத சுவாமி தனது வருத்தத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளார். மேலும் குற்றவாளிகளை விசாரித்து உடனடியாக தண்டிக்குமாறு மாநில அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சாதுர்மாஸ்ய விரதத்தின் காரணமாக தற்போது வடக்கு கர்நாடகத்தில் உள்ள குல்பர்கா என்ற கலபுரகியில் தங்கியுள்ள சுவாமிகள், தமது மன வருத்தத்தை மாநில அரசுக்கு உணர்த்தியுள்ளார்.

navabrindavan7 - 2026“வியாசராஜ மடத்தின் பக்தர்கள், ஏற்கெனவே இருந்தது போல், வியாசராஜரின் பிருந்தாவனத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர், மேலும் உத்தராதி மடம் இந்தப் பணிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும்” என்று சுவாமிகள் கூறியுள்ளார். அவர் தனது சாதுர்மாஸ்ய சடங்கு அவகாசத்தைக் குறைத்துக் கொண்டு, வியாசராஜ தீர்த்தரின் பிருந்தாவனம் சேதப் படுத்தப் பட்டதால் கடும் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் பக்தர்களை ஆறுதப் படுத்த ஆனேகொண்டிக்கு விரைந்தார்.

navabrindavan10 - 2026உத்தராதி மடம், ராகவேந்திர மடம், வியாசராஜ மடம், பாதராஜ மடம் மற்றும் பிற முக்கிய மடங்களுக்குச் சொந்தமான மாதவ சம்பிரதாயத்தைச் சேர்ந்த ஒன்பது முக்கிய தீர்த்தர்களின் பிருந்தாவனங்கள் (சமாதி) கொண்ட தொகுப்பே நவ பிருந்தாவனம் என்று அன்பர்களால் வணங்கப் பட்டு வருகிறது. சில ஆண்டுகள் முன்பு வரை இந்த இடம் சர்ச்சையில் சிக்கியிருந்தது. இது குறித்த வழக்கு விவகாரமும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

ALSO READ:  இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

navabrindavan4 - 2026முன்னதாக உத்தராதி மடம் மற்றும் ராகவேந்திர மடம் ஆகிய இரண்டையும் சேர்ந்த பக்தர்கள் நவ பிருந்தாவனத்தில் ஆராதனைகளைச் செய்வதில் உரிமை யாருக்கு என்பதில் பிரச்னை ஏற்பட்டது.

இதனால், நவபிருந்தாவனம் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. துங்கபத்ரா நதியால் சூழப்பட்ட ஆனேகொண்டியில் உள்ள 100 ஏக்கரில் 27.5 ஏக்கர் நிலத்தின் மீது உரிமை கோரி இரு மடத்தின் பக்தர்களும் சட்டப் போரில் ஈடுபட்டிருந்தனர்.

navabrindavan3 - 2026இரண்டு மடங்களின் பக்தர்களும் நவ பிருந்தாவனத்தில் ஸ்ரீ மத்வாச்சார்யரின் முதல் சீடரான பத்மநாப தீர்த்தருக்கான பூஜைகளைச் செய்ய முயன்றபோது இருவருக்குள்ளும் சம்பிரதாய ரீதியான தகராறு ஏற்பட்டது.

navabrindavanam - 2026
வழிபாட்டுக்குரிய நவபிருந்தாவனம் (கோப்பு படம்)

இருப்பினும், பின்னாளில் பக்தர்கள் அதிக அளவில் ஆனேகொண்டிக்கு படையெடுத்தனர். தமிழகத்தில் ஜோதிடப் பத்திரிகைகள், ஆன்மிக இதழ்களில் நவபிருந்தாவனத்தின் சிறப்புகள் குறித்து கடந்த கால் நூற்றாண்டு காலமாக கட்டுரைகள் வெளியாயின. இதனால் உந்தப் பட்ட தமிழக பக்தர்களும் பெருமளவில் ஆனேகொண்டிக்கு சென்று வந்து கொண்டிருந்தனர். பலரது இல்லங்களில் நவ பிருந்தாவன படம் அலங்கரிக்கிறது. குறிப்பாக வியாழக்கிழமை நவபிருந்தாவனத்தை தரிசித்து விட்டு, வியாசராஜரை மனத்தால் தொழுது சென்றால் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும், நன்மைகள் நடக்கும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உண்டு.

இந்த நிலையில், நவபிருந்தாவனம் சிதைக்கப் பட்டிருப்பது, தமிழகத்தில் உள்ள பக்தர்களின் மனங்களிலும் ரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

navabrindavan6 - 2026இதனிடையே, தமிழக பக்தர்களும் தங்களின் மனக்குமுறலை சமூகத் தளங்களில் கொட்டி வருகின்றனர்.

மாலிகாஃபூர், ஔரங்கசீப், கில்ஜி ஆட்சி கால கொடூரங்களில் ஒன்றாக ஹிந்து தேசியவாதியின் ஆட்சியின் போதே இன்றும் அரங்கேற்றப்படுகிறது. 800 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து தர்மநெறிகளைக் காத்தருளி பிருந்தாவனமான மஹான் வியாசராஜர் மூல பிருந்தாவனம் கயவர்களால் முற்றிலும் இடிக்கப்பட்டதை கண்டு நெஞ்சம் பதறுகிறது.

ALSO READ:  கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கர்நாடக மாநிலம் ஆனேகுந்தியில் உள்ள நவ பிருந்தாவனம் உள்ள ஸ்ரீ வியாசராஜரின் மூல பிருந்தாவனம் நேற்றிரவு கயவர்களால் முற்றிலும் இடிக்கபட்டது. இன்று காலை வழக்கம் போல் பூஜை செய்ய படகில் வந்த பூஜாரிகள் அதைக் கண்டு மிக அதிர்ச்சி அடைந்தனர்.

navabrindavan5 - 2026இஸ்லாமியர்களின் ஆட்சிக்காலத்தில் தென்னகம் அவதியுற்றபோது, தென்பாரதம் (கட்டை விரல் அளவு உயரம் உள்ள) ஆஞ்சநேயர் சன்னதிகளை உருவாக்கி மக்களை இன்னல்களில் இருந்து காத்தருளினார் வியாசராஜர். இந்த சந்நிதிகள் இன்றளவும் சக்தி கேந்திரங்களாக திகழ்கின்றன. சூட்சுமமாக இருந்து தர்மத்தை காத்துநின்ற இந்த மஹானின் சந்நிதி அடியோடு தகர்க்கப்பட்டது ஹிந்து தா்மத்திற்க்கு அபாயகரமான நிகழ்வு.

ஹிந்து தேசியவாதியின் ஆட்சி நடைபெறும் போதே வழிபாட்டு தலம் இடிக்கப் படுகிறதென்றால், அரக்கா்களின் வஞ்சக திட்டத்தை நினைத்து பார்க்க முடியவில்லை. முதுகெலும்பற்ற நடுநிலை முட்டாள்களால் இன்னும் என்னென்ன நேருமோ.. நரசிம்மனாய் வந்து காத்தருள வேண்டும் இறைவா!- என்று கெஞ்சி இறைஞ்சி வேண்டுகின்றனர் பக்தர்கள்!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img