பணியில் இருந்தபோது வீடியோ எடுத்து அதை சமூக வலைதள செயலியான டிக்டாக்கில் பதிவு செய்த போலீசார் இருவர் ஞாயிற்றுக்கிழமை சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளனர்.
குஜராத்தில் ராஜ்கோட்டில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் பெண் காவலர் அல்பிதா சவுத்திரி (24 வயது) சாதாரண உடையில் நடனமாடி அதை டிக்டாக்கில் உலவ விட்டார். இதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது பரபரப்பாகப் பேசப் பட்டது.
இந்த நிலையில் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அறை காவலர்களான ப்ரஜித் அகர்வால், அமித் ஆகியோர் டிக்டாக் செயலியில் அண்மையில் வீடியோ ஒன்றினை வெளியிட்டு இருந்தனர்.
அதில் பிசிஆர் போலீஸ் வேனை அமித் ஓட்ட அந்த வேன் மீது ஒருவர் அமர்ந்து செல்வதை அகர்வால் வீடியோ எடுக்கும் காட்சி பதிவாகியிருந்தது.
இதை அடுத்து பணி நேரத்தில் டிக்டாக்கில் வீடியோ எடுத்து பதிவிட்டதாகக் கூறி, காவலர்கள் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் ராம்நாத் பாரா போலீஸ் ஸ்டேஷனில் எடுக்கப் பட்டுள்ளது என்று மண்டல ஆய்வாளர் என்.கே.ஜடேஜா தெரிவித்துள்ளார்.