ராஜீவ் கொலைக் குற்றவாளிகளான பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்து மனு கொடுத்தார் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள். உடன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளன் சென்றிருந்தார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப் பட்டு, கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பில் தமிழக ஆளுநர் முடிவு எடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. இந்நிலையில் தமிழக அமைச்சரவை கூடி, இது குறித்த தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு அந்தத் தீர்மானத்தையும் அனுப்பி வைத்தது. இருப்பினும், அதன் மீது ஆளுநர் இன்னும் முடிவெடுக்கவில்லை.
இந்த நிலையில் இன்று தில்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் மனு ஒன்றை அளித்தார். அதில் பேரறிவாளன் உள்ளிட்டவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருந்தார்.
அற்புதம்மாளுடன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் தொகுதி உறுப்பினருமான திருமாவளவனும், விழுப்புரம் தொகுதி எம்.பி. ரவிக்குமாரும் அமித் ஷாவை சந்திக்கச் சென்று இருந்தனர்.